“அம்மா, ஆனந்த் எங்கம்மா?”
“தெரியலையே ஆதி.காலையில சீக்கரமா எழுந்து காப்பி கேட்டான்.கொண்டு போய் கொடுத்தப்ப அவனோட அறையில படிச்சுண்டு இருந்தான்.கொஞ்ச நேரம் கழிச்சு கதவை தாழ்போட்டுக்கோ அம்மான்னு சொல்லிட்டு எங்கேயோ கிளம்பிப்போயிட்டான்,நான் எங்கேடா கிளம்பிட்டே காலங்கார்த்தாலன்னு கேட்டத அவன் கவனிக்கவே இல்லை அவசரமா போயிட்டான்”.
“என்னம்மா நீ,எங்கப்போறான்னு கேட்டு வைச்சுக்க கூடாது? இப்ப மணி 8.30 ஆயிடுச்சு,இப்ப கிளம்பினாக்கத்தான் தீபாவளிக்கு துணி வாங்கிண்டு, 12 மணி காட்சிக்கு அந்த படத்துக்கு போக முடியும்?’
“போன் பண்ணிப்பாரேண்டா எங்க இருக்கான்னு தெரியபோறது”
“சரி”
ஆதி போன் செய்ய ஆனந்தின் போன் அவன் அறையிலிருந்தே ஒலித்தது.
போன விட்டுட்டு போகிற அளவுக்கு அப்படி என்ன அவசரம் அவனுக்கு என்று எண்ணிய படியே ஆனந்த்தின் அறைக்கு சென்றான்.
சற்று நேரத்தில், “அம்மா இங்க வா” என்ற ஆதியின் குரல் கேட்டு அம்மா
“என்னப்பா ஆதி” என்றபடி அறையின் உள்ளே சென்றார்.ஆதி கையில் ஆனந்தின் செல்போனுடன் அமர்ந்திருந்தான்.மேஜையின் மீது இரண்டு காகிததுண்டுகள்.
அதில் என்னமோ கோகுல்,விஷ்ணு என்று எழுதியிருக்க, அம்மா, “என்ன ஆதி அது காகிதம் என்ன பார்த்துண்டு இருக்க?” என்று கேட்ட நேரத்தில் அவன் கையிலிருந்த செல் போன் ஒலித்தது.திடுக்கிட்ட ஆதி யார் என்று பார்க்க அதில் ‘விஷ்ணு இன்பார்மர்’என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தது.
“யார்மா இது? விஷ்ணு இன்பார்மர்,கொஞ்ச நேரத்துக்கு முன்ன இந்த ஆள்கிட்டேருந்துதான் போன் வந்தது இரண்டு மூன்று தடவை அடித்துவிட்டு நின்றுவிட்டது,அதுக்குதான் உன்னை கூப்பிட்டேன்.பார் இப்ப மறுபடியும் இரண்டு மூன்று முறையுடன் நின்று விட்டது.ஆனந்த் எங்க போயிருக்கான்?”
“எனக்கு தெரியலேப்பா, யார் இது புதுசா இருக்கே பேரு,எனக்கு பயம்மா இருக்கே இவன் ஏதாவது வம்புதும்புல மாட்டிண்டான்னா? இன்பார்மர் அப்படி இப்படின்னு போன் வருதே போலிஸ் கேஸ் ஏதாவதா? இவன் கிளம்பிப்போய் 4 மணி நேரம் ஆயிடுத்தே அப்பாக்கு போன் போடுடா, அவர்கிட்ட சொல்லு”
என்று அம்மா புலம்ப ஆரம்பித்தார்.
“அம்மா நீ சும்மா இரு இன்பார்மர்னாக்க போலிஸ் நினைவுதான் வரணுமா? அப்பாக்கிட்ட இப்ப சொல்ல வேண்டாம் அவர் ஏற்கனவே அவன் நிறைய மார்க் வாங்கி கூட ஐ.ஐ.டில சேரல,இன்ஜினியரிங் சேரல ஆர்ட்ஸ்ல சேர்ந்துட்டானு இவன் எதிர்காலம் அவ்வளவுதான்னு கரிச்சு கொட்டிண்டு இருக்கார். நான் அவன் நண்பர்களுக்கு போன் பண்ணிக்கேட்கிறேன்”
அவன் சொல்லிக்கொண்டிருந்த அந்த நேரத்துல அழைப்பு மணி சத்தம் கேட்க வாசலுக்கு விரைந்தார்கள்.
“என்னாச்சு? கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்றபடி உள்ளே வந்த அப்பா அவர்கள் இருவரும் திகைத்து நிற்பதை பார்த்து, “என்ன பேய் அறைந்த மாதிரி இருக்கீங்க யாருக்கு என்ன?” என்று கேட்டார்.
அம்மா சமாளித்துக்கொண்டு, “வாங்கோ! நீங்க நாளைக்குதானே டில்லியிலிருந்து வரதா இருந்தது?” என்றார்.
“ஆமாம் வேலை சீக்கரமே முடிஞ்சுடுத்து,பிளைட்டும் கிடைச்சுது அதனால் வந்துவிட்டேன்.நான் சீக்கிரமா வந்தது தப்பா?” என்ற படி அவர்களுடைய பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றார்.
“அம்மா,அப்பா ஆனந்த்தை பற்றி கேட்டால் ஏதாவது சொல்லி சாமாளி அதற்குள் நான் போய் அவன் நண்பர்களை பார்த்துவிட்டு வந்துடறேன்”
என்றபடி ஆதி வெளியே சென்றான்.
சற்று நேரத்தில் ஆதி திரும்பி வந்த போது,அப்பா, “அவன் கேட்கற எல்லாம் செய்து கொடுத்து அவனை கெடுத்து வைத்துவிட்டீங்க ஆதியும் நீயுமா சேர்ந்து இப்ப பார் போலிஸ் அது இதுன்னு ஆயிடுத்துண்ணாக்க அவன் எதிர்காலம் என்ன ஆறது? அதுக்குதான் அப்பவே அடிச்சு சொன்னேன் அவனை ஆர்ட்ஸ்ல சேரவேண்டாம் ஐ.ஐ.டில சேருன்னு கேட்டீங்களா?” என்று கத்திக்கொண்டு இருந்தார்.
“அதுக்கும் இதுக்கும் இப்ப என்ன சம்பந்தம்,நீங்க அவன எப்ப பாரு கரிச்சுக்கொட்டிண்டே இருந்தீங்க அதனால்தான் அவனுக்கு இப்படி என்னமோ ஆயிடுத்து” என்று அம்மா அழ ஆரம்பித்தார்.
உள்ளே வந்த ஆதிஅம்மா விஷயத்தினை அப்பாவிடம் சொல்லிவிட்டதை புரிந்து கொண்டு, “இரண்டு பேரும் பேசாம இருங்கோ!அப்பா உங்க நண்பர் யாரோ ராஜேந்திரனாம் ஆனந்த் செல்லுக்கு போன் பண்ணினார்.அவர் கொஞ்ச நேரத்துல ஆனந்த்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கார்” என்றான்.
“ராஜேந்திரனா? அவன் அஸிஸ்டன் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஆச்சே அவன் எதுக்கு நம்ம ஆனந்த்தை கூட்டிண்டு வரணும்?”
வாசலில் ஒரு போலிஸ் ஜீப் வந்து நிற்க அதிலிருந்து மிடுக்குடன் ஒரு போலீஸ் அதிகாரி இறங்கினார்.பின்னாலேயே சற்று தளர்சியுடன் ஆனந்த். அப்பா வாசலுக்கு “வாப்பா ராஜேந்திரா! உன்னை பார்த்தே பல வருஷம் ஆச்சேப்பா? ”என்றபடி
விரைந்து அவரை வரவேற்க சென்றார்.
அந்த போலிஸ் அதிகாரி,”என்ன குருமூர்த்தி,எப்படி இருக்கே, பையனை விசாரித்த போது உன் பையன் தான் என்று தெரிந்துவிட்டது.அதனால் நானே கொண்டு வந்து விடலான்னு வந்தேன்.என்ன நீ இப்படி ஒரு பையன பெத்து வெச்சிருக்க?” என்றார்.
அப்பா உடனே, “டேய் ராஜேந்திரா அவன் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சு என் பையன விட்டுவிடுடா இனிமேல் அவனுக்கு புத்தி சொல்லி நான் பார்த்துக்கறேன்” என்று கெஞ்ச.
“என்ன குரு ?உன் பையன் போய் தப்பு செய்வானா? அவன் இன்னைக்கு பண்ணியிருக்கற வேலைக்கு எங்க டிபார்ட்மெண்டுல சொல்லி மெடலுக்கும் சான்றிதழ் பத்திரத்துக்கும் ஏற்பாடு செய்யப்போகிறேன்.இன்னைக்கு காலையில பஸ் அக்ஸிடெண்ட் ஆயிடுத்து அங்க வந்து எல்லோருக்கும் உதவி செய்து நிதானமாக ஒவ்வொருவரையாக ஆம்புலன்ஸும் போலிஸும் வருவதற்குள்ள கிடைத்த வண்டிகளில் ஆஸ்பத்ரிக்கு அனுப்பிவைத்தான். அவனுடைய சமயோசிதமான புத்தியினால் நிறைய பேர்கள் பிழைத்தார்கள்.ஆம்புலன்ஸ் வருவதற்கு காத்திருந்தால் பல பேர்களின் உயிருக்கு ஆபத்து ஆயிருக்கும்.”
என்றவர் தொடர்ந்து, “அவனுக்கு ஐ.பி.எஸ் ஆக வேண்டும்னு ஆசையாமே .நீ அவன் அண்ணா ஆதித்யா மாதிரி சாஃப்ட்வேர்க்கு போகணும்னு சொன்னியாம் அவன் மாட்டேன்னு சொல்லிட்டானாமே? அவனுடைய நிதானம் மற்றும் சமயோசிதம் ஆகியவை தான் இன்று பெரிய உயிர்சேதத்தை தவிர்த்து இருக்கு.
இந்த மாதிரி அவசர காலங்களில் சமயோசிதமாக நடக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரி குணம் உள்ளவர்கள் தான் போலிஸ் டிபார்ட் மெண்ட்டுக்கு தேவை.ஆனந்த் என்னோட நண்பரின் பையன்னு சொல்லிக்க நான் ரொம்ப பெருமைபடறேன் குருமூர்த்தி.” என்றார்.
“எனக்கு நிறைய வேலை இருக்கு ஆனந்தை உள்ளே அழைத்துக்கொண்டு போ.நான் இன்னொரு நாள் நிதானமாக வந்து பார்க்கிறேன்”என்றபடி பதிலுக்கு காத்திருக்காமல் ஜீப்பில் ஏறிச்சென்றார்.
உள்ளே வந்த ஆனந்த், “அம்மா மன்னிச்சுடுமா உன்கிட்ட சொல்லாம போனதுக்கு கார்த்தால படிச்சுண்டு இருக்கறப்போ பாடத்துல சந்தேகம் வந்தது அதுக்காக சுரேஷுக்கு போன் பண்ணினேன்.அவன் ஏதோ கல்யாணத்துக்கு தஞ்சாவூர் போய்விட்டு பஸ்சுல பெருங்களத்தூர் தாண்டி வந்துண்டு இருக்கறதா சொன்னான்.அவன் கூட பேசிக்கொண்டு இருந்தப்போ அவன் டேய் ஆனந்த் பஸ் தீடீர்ன்னு தாறுமாறா ஓடரதுன்னு பிரேக் பிடிக்கல போல இருக்குன்னு சொன்னான்.அப்போ ஒரு பெரிய சத்தத்தோட போன் கட்டயிடுத்து.”
என்றவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து “நம்ம வீடு தாம்பரத்துல இருக்கறதால பெருங்களத்தூர் பக்கம் தானே வண்டியயெடுத்துண்டு போனேன்.போய் பார்த்தாக்க பஸ்சு பெருங்களத்தூர் பாலத்தை தாண்டி தாம்பரம் கிட்ட மீடியன்மேலே ஏறி ஒருபக்கமா கிடந்துது.ஒரே சத்தமா இருந்துது.கண்டக்டர்தான் பாவம் தனி ஆளா எல்லோருக்கும் உதவிண்டு இருந்தார். நான் உடனே அவருக்கு உதவிண்டே வெளியே வந்தவர்களில் ரொம்ப அடிப்பட்டு இருந்தவங்களை அந்தப்பக்கம் வந்த சில வண்டிகளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினேன்”.
“நம்ப சுரேஷுக்கும் கையில பலமான அடி. அவனோட ஆஸ்பத்திரிக்கு போனேன்.அப்பதான் கண்டக்டர் சொல்லியிருப்பார் போல் இருக்கு இந்த ராஜேந்திரன் சார் என்கிட்ட பேசினார்.அவர்தான் என்னை கொண்டு வீட்டுக்கு விடுகிறேன் சொல்லி அழைத்து வந்தார்.”
அப்பா உடனே,”என்ன மன்னிச்சுடுடா ஆனந்த் உன்கிட்ட இருக்கிற திறமையை சரியா புரிஞ்சுக்கலை நான்”. என்றார்.
“என்னப்ப நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு நீங்க என் நன்மைக்குதான் செய்வீங்க, சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும் எனக்கு ஐ.பி.எஸ்.ஆகணும் அதுக்கு மட்டும் உங்க சம்மதம் கிடைச்சா போதும்” என்றான் ஆனந்த்.
“நீ என்னப்படிக்க வேணுமோ படிப்பா. உன் விருப்பம் எதுவோ அதை பண்ணு”என்ற அப்பாவை சந்தோஷமா பார்த்தனர் சகோதரர்கள் இருவரும்.
ஆதி உடனே, “ டேய் ஆனந்த் அது யாருடா விஷ்ணு இன்பார்மர்,உனக்கு இரண்டு மூன்று முறை மிஸ்டு கால் கொடுத்தது. அதை பார்த்ததும் நானும் அம்மாவும் பயந்து போயிட்டோம்” என வினவ
ஆனந்த், “ அவனா? எங்க காலேஜ்ல 2 விஷ்ணு இருக்காங்க அதுக்காக அடையாளம் தெரியரத்துக்கு அப்படி பேர் வைச்சிருக்கோம். ஒருத்தன் பெரிய புட்டிபோட்டுண்டு எப்ப பாரு தடிதடியா புத்தகத்த வெச்சுண்டு அலைவான் அவனுக்கு ‘விஷ்ணு நெர்டி’(nerdy) .இவன் இன்பார்மர்,நாங்க கிளசுக்கு கட் அடிசுட்டு சினிமாக்கு போறதும், மற்ற விஷயங்கள் பேசரதையெல்லாம் கேட்டு புரஃபசர் கிட்ட போட்டு கொடுப்பதே இவன் வேலை. அதனால இவனுக்கு இன்பார்மர். சரியான கஞ்சன் எப்போதும் மிஸ்ட் கால்தான், போன் பண்ணவே மாட்டான்”.என்றான்.
அம்மா, “அதென்னப்பா ஆனந்த் உன் மேஜை மேல இரண்டு துண்டு காகிதம் இருந்ததே ” எனகேட்க
“அதுவாம்மா,நேத்திக்கு வாசு மாமா வந்தாரே அவர் கொண்டு வந்தார்.ஏதோ பதிவுலகத்துல ‘சவால் சிறுகதை-2011’ போட்டியாம்.இந்த துண்டு காகிதத்துல இருக்கற வார்த்தைகள் அதுல வரணுமாம்.என்னை ஏதாவது கதைக்கான கரு சொல்லுன்னு கேட்டார்.வச்சுட்டு போங்க யோசித்து வைக்கிறேன் சொன்னேன்”.
“அடப்பாவி இவன கதை எழுதச்சொன்னா எல்லோரையும் கேட்டுண்டு திரியரானா” என்று தன் தம்பியை அம்மா செல்லமாக கடிந்து கொள்ள அனைவரும் சிரித்தனர்.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” என்று சொல்லுவதற்கு ஏற்ற மாதிரி தனக்கு பிறந்த மகன்களை பெருமிதத்துடன் பார்த்தார் அந்த தந்தை குருமூர்த்தி.
---------------------------------------------------------------------------------------------------------------------