திங்கள், அக்டோபர் 31, 2011

அறிந்து கொள்வோம்---கன்னட ராஜ்ய உத்சவம்.

கர்நாடகாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் தேதி மிகவும் சிறப்பாக ராஜ்ய உத்சவம் கொண்டாடப்படுகிறது.

1956 ம் வருடம் நவம்பர் முதல் தேதியில் கன்னடம் பேசப்படும் பகுதிகளை இணைத்து கர்நாடகா மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.அதிலிருந்து இந்த தேதியை ராஜ்ய உத்சவமாக கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் கர்நாடகா முழுவதற்கும் விடுமுறைதான். அரசு அலுவலகங்கள்,கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்நாளில் விடுமுறை கொடுக்கப்படுகிறது.

நவம்பர் 1 ம் தேதி -- இந்த நாளினை சிறப்பிக்கும் பொருட்டு அரசு சார்பில் பல விழாக்கள், ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றது.

File:Flag of Karnataka.svg

இந்த மஞ்சள் மற்றும் சிவப்புக்கொடி கன்னட மாநிலத்திற்கான கொடியாகும்.அன்றைய நாளில் இந்தக்கொடி ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் வாகனங்களை அலங்கரிக்கும்.

கர்நாடக மாநில அரசு,பல துறைகளில் நிபுணர்களாக விளங்குபவர்களுக்கு கர்நாடக ரத்னா என்கிற பட்டம் கொடுத்து கெளரவிக்கிறது.

                   விதான் செளதா.




    விதான்செளதாவின் முன்னால் கலைநிகழ்ச்சிகள்.





விருது பெற்ற சில பிரமுகர்கள்.




 லால்பாக்கில் உள்ள (glass house)


ஊர்வலம்







 
 ‘டொல்லு குனிதா ’எனப்படும் நாட்டுபுற கலை
   நிகழ்ச்சி.


  யக்‌ஷ கானம் எனப்படும் புராதனமான 
  நாட்டுப்புற கலை.


அண்டை மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் பொருட்டே இந்த பதிவு.


நன்றி.
ரமா ரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், அக்டோபர் 25, 2011

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி (சவால் சிறுகதை-2011’)

 “அம்மா, ஆனந்த் எங்கம்மா?”

 “தெரியலையே ஆதி.காலையில சீக்கரமா எழுந்து காப்பி கேட்டான்.கொண்டு போய் கொடுத்தப்ப அவனோட அறையில படிச்சுண்டு இருந்தான்.கொஞ்ச நேரம் கழிச்சு கதவை தாழ்போட்டுக்கோ அம்மான்னு சொல்லிட்டு எங்கேயோ கிளம்பிப்போயிட்டான்,நான் எங்கேடா கிளம்பிட்டே காலங்கார்த்தாலன்னு கேட்டத அவன் கவனிக்கவே இல்லை அவசரமா போயிட்டான்”.

 “என்னம்மா நீ,எங்கப்போறான்னு கேட்டு வைச்சுக்க கூடாது? இப்ப மணி 8.30 ஆயிடுச்சு,இப்ப கிளம்பினாக்கத்தான் தீபாவளிக்கு துணி வாங்கிண்டு, 12 மணி காட்சிக்கு அந்த படத்துக்கு போக முடியும்?’

 “போன் பண்ணிப்பாரேண்டா எங்க இருக்கான்னு தெரியபோறது”

 “சரி”

ஆதி போன் செய்ய ஆனந்தின் போன் அவன் அறையிலிருந்தே ஒலித்தது.

போன விட்டுட்டு போகிற அளவுக்கு அப்படி என்ன அவசரம் அவனுக்கு என்று எண்ணிய படியே ஆனந்த்தின் அறைக்கு சென்றான்.

 சற்று நேரத்தில், “அம்மா இங்க வா” என்ற ஆதியின் குரல் கேட்டு அம்மா
  “என்னப்பா ஆதி” என்றபடி அறையின் உள்ளே சென்றார்.ஆதி கையில் ஆனந்தின் செல்போனுடன் அமர்ந்திருந்தான்.மேஜையின் மீது இரண்டு காகிததுண்டுகள்.



அதில் என்னமோ கோகுல்,விஷ்ணு என்று எழுதியிருக்க, அம்மா, “என்ன ஆதி அது காகிதம் என்ன பார்த்துண்டு இருக்க?” என்று கேட்ட நேரத்தில் அவன் கையிலிருந்த செல் போன் ஒலித்தது.திடுக்கிட்ட ஆதி யார் என்று பார்க்க அதில் ‘விஷ்ணு இன்பார்மர்’என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தது.

 “யார்மா இது? விஷ்ணு இன்பார்மர்,கொஞ்ச நேரத்துக்கு முன்ன இந்த ஆள்கிட்டேருந்துதான் போன் வந்தது இரண்டு மூன்று தடவை அடித்துவிட்டு நின்றுவிட்டது,அதுக்குதான் உன்னை கூப்பிட்டேன்.பார் இப்ப மறுபடியும் இரண்டு மூன்று முறையுடன் நின்று விட்டது.ஆனந்த் எங்க போயிருக்கான்?”

 “எனக்கு தெரியலேப்பா, யார் இது புதுசா இருக்கே பேரு,எனக்கு பயம்மா இருக்கே இவன் ஏதாவது வம்புதும்புல மாட்டிண்டான்னா? இன்பார்மர் அப்படி இப்படின்னு போன் வருதே போலிஸ் கேஸ் ஏதாவதா? இவன் கிளம்பிப்போய் 4 மணி நேரம் ஆயிடுத்தே அப்பாக்கு போன் போடுடா, அவர்கிட்ட சொல்லு”

என்று அம்மா புலம்ப ஆரம்பித்தார்.

  “அம்மா நீ சும்மா இரு இன்பார்மர்னாக்க போலிஸ் நினைவுதான் வரணுமா? அப்பாக்கிட்ட இப்ப சொல்ல வேண்டாம் அவர் ஏற்கனவே அவன் நிறைய மார்க் வாங்கி கூட ஐ.ஐ.டில சேரல,இன்ஜினியரிங் சேரல ஆர்ட்ஸ்ல சேர்ந்துட்டானு இவன் எதிர்காலம் அவ்வளவுதான்னு கரிச்சு கொட்டிண்டு இருக்கார். நான் அவன் நண்பர்களுக்கு போன் பண்ணிக்கேட்கிறேன்”

அவன் சொல்லிக்கொண்டிருந்த அந்த நேரத்துல அழைப்பு மணி சத்தம் கேட்க வாசலுக்கு விரைந்தார்கள்.

“என்னாச்சு? கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்றபடி உள்ளே வந்த அப்பா அவர்கள் இருவரும் திகைத்து நிற்பதை பார்த்து, “என்ன பேய் அறைந்த மாதிரி இருக்கீங்க யாருக்கு என்ன?” என்று கேட்டார்.

அம்மா சமாளித்துக்கொண்டு, “வாங்கோ! நீங்க நாளைக்குதானே டில்லியிலிருந்து வரதா இருந்தது?” என்றார்.

 “ஆமாம் வேலை சீக்கரமே முடிஞ்சுடுத்து,பிளைட்டும் கிடைச்சுது அதனால் வந்துவிட்டேன்.நான் சீக்கிரமா வந்தது தப்பா?” என்ற படி அவர்களுடைய பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றார்.

“அம்மா,அப்பா ஆனந்த்தை பற்றி கேட்டால் ஏதாவது சொல்லி சாமாளி அதற்குள் நான் போய் அவன் நண்பர்களை பார்த்துவிட்டு வந்துடறேன்”
என்றபடி ஆதி வெளியே சென்றான்.

சற்று நேரத்தில் ஆதி திரும்பி வந்த போது,அப்பா, “அவன் கேட்கற எல்லாம் செய்து கொடுத்து அவனை கெடுத்து வைத்துவிட்டீங்க ஆதியும் நீயுமா சேர்ந்து இப்ப பார் போலிஸ் அது இதுன்னு ஆயிடுத்துண்ணாக்க அவன் எதிர்காலம் என்ன ஆறது? அதுக்குதான் அப்பவே அடிச்சு சொன்னேன் அவனை ஆர்ட்ஸ்ல சேரவேண்டாம் ஐ.ஐ.டில சேருன்னு கேட்டீங்களா?” என்று கத்திக்கொண்டு இருந்தார்.

 “அதுக்கும் இதுக்கும் இப்ப என்ன சம்பந்தம்,நீங்க அவன எப்ப பாரு கரிச்சுக்கொட்டிண்டே இருந்தீங்க அதனால்தான் அவனுக்கு இப்படி என்னமோ ஆயிடுத்து” என்று அம்மா அழ ஆரம்பித்தார்.

உள்ளே வந்த ஆதிஅம்மா விஷயத்தினை அப்பாவிடம் சொல்லிவிட்டதை புரிந்து கொண்டு,  “இரண்டு பேரும் பேசாம இருங்கோ!அப்பா உங்க நண்பர் யாரோ ராஜேந்திரனாம் ஆனந்த் செல்லுக்கு போன் பண்ணினார்.அவர் கொஞ்ச நேரத்துல ஆனந்த்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கார்” என்றான்.

 “ராஜேந்திரனா? அவன் அஸிஸ்டன் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஆச்சே அவன் எதுக்கு நம்ம ஆனந்த்தை கூட்டிண்டு வரணும்?”

வாசலில் ஒரு போலிஸ் ஜீப் வந்து நிற்க அதிலிருந்து மிடுக்குடன் ஒரு போலீஸ் அதிகாரி இறங்கினார்.பின்னாலேயே சற்று தளர்சியுடன் ஆனந்த். அப்பா வாசலுக்கு  “வாப்பா ராஜேந்திரா! உன்னை பார்த்தே பல வருஷம் ஆச்சேப்பா? ”என்றபடி
விரைந்து அவரை வரவேற்க சென்றார்.

அந்த போலிஸ் அதிகாரி,”என்ன குருமூர்த்தி,எப்படி இருக்கே, பையனை விசாரித்த போது உன் பையன் தான் என்று தெரிந்துவிட்டது.அதனால் நானே கொண்டு வந்து விடலான்னு வந்தேன்.என்ன நீ இப்படி ஒரு பையன பெத்து வெச்சிருக்க?” என்றார்.

அப்பா உடனே, “டேய் ராஜேந்திரா அவன் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சு என் பையன விட்டுவிடுடா இனிமேல் அவனுக்கு புத்தி சொல்லி நான் பார்த்துக்கறேன்” என்று கெஞ்ச.

 “என்ன குரு ?உன் பையன் போய் தப்பு செய்வானா? அவன் இன்னைக்கு பண்ணியிருக்கற வேலைக்கு எங்க டிபார்ட்மெண்டுல சொல்லி மெடலுக்கும் சான்றிதழ் பத்திரத்துக்கும் ஏற்பாடு செய்யப்போகிறேன்.இன்னைக்கு காலையில பஸ் அக்ஸிடெண்ட் ஆயிடுத்து அங்க வந்து எல்லோருக்கும் உதவி செய்து நிதானமாக ஒவ்வொருவரையாக ஆம்புலன்ஸும் போலிஸும் வருவதற்குள்ள கிடைத்த வண்டிகளில் ஆஸ்பத்ரிக்கு அனுப்பிவைத்தான். அவனுடைய சமயோசிதமான புத்தியினால் நிறைய பேர்கள் பிழைத்தார்கள்.ஆம்புலன்ஸ் வருவதற்கு காத்திருந்தால் பல பேர்களின் உயிருக்கு ஆபத்து ஆயிருக்கும்.”

என்றவர் தொடர்ந்து, “அவனுக்கு ஐ.பி.எஸ் ஆக வேண்டும்னு ஆசையாமே .நீ அவன் அண்ணா ஆதித்யா மாதிரி சாஃப்ட்வேர்க்கு போகணும்னு சொன்னியாம் அவன் மாட்டேன்னு சொல்லிட்டானாமே? அவனுடைய நிதானம் மற்றும் சமயோசிதம் ஆகியவை தான் இன்று பெரிய உயிர்சேதத்தை தவிர்த்து இருக்கு.
இந்த மாதிரி அவசர காலங்களில் சமயோசிதமாக நடக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரி குணம் உள்ளவர்கள் தான் போலிஸ் டிபார்ட் மெண்ட்டுக்கு தேவை.ஆனந்த் என்னோட நண்பரின் பையன்னு சொல்லிக்க நான் ரொம்ப பெருமைபடறேன் குருமூர்த்தி.” என்றார்.

 “எனக்கு நிறைய வேலை இருக்கு ஆனந்தை உள்ளே அழைத்துக்கொண்டு போ.நான் இன்னொரு நாள் நிதானமாக வந்து பார்க்கிறேன்”என்றபடி பதிலுக்கு காத்திருக்காமல் ஜீப்பில் ஏறிச்சென்றார்.

உள்ளே வந்த ஆனந்த், “அம்மா மன்னிச்சுடுமா உன்கிட்ட சொல்லாம போனதுக்கு கார்த்தால படிச்சுண்டு இருக்கறப்போ பாடத்துல சந்தேகம் வந்தது அதுக்காக சுரேஷுக்கு போன் பண்ணினேன்.அவன் ஏதோ கல்யாணத்துக்கு தஞ்சாவூர் போய்விட்டு பஸ்சுல பெருங்களத்தூர் தாண்டி வந்துண்டு இருக்கறதா சொன்னான்.அவன் கூட பேசிக்கொண்டு இருந்தப்போ அவன் டேய் ஆனந்த் பஸ் தீடீர்ன்னு தாறுமாறா ஓடரதுன்னு பிரேக் பிடிக்கல போல இருக்குன்னு சொன்னான்.அப்போ ஒரு பெரிய சத்தத்தோட போன் கட்டயிடுத்து.”

என்றவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து “நம்ம வீடு தாம்பரத்துல இருக்கறதால பெருங்களத்தூர் பக்கம் தானே வண்டியயெடுத்துண்டு போனேன்.போய் பார்த்தாக்க பஸ்சு பெருங்களத்தூர் பாலத்தை தாண்டி தாம்பரம் கிட்ட மீடியன்மேலே ஏறி ஒருபக்கமா கிடந்துது.ஒரே சத்தமா இருந்துது.கண்டக்டர்தான் பாவம் தனி ஆளா எல்லோருக்கும் உதவிண்டு இருந்தார். நான் உடனே அவருக்கு உதவிண்டே வெளியே வந்தவர்களில் ரொம்ப அடிப்பட்டு இருந்தவங்களை அந்தப்பக்கம் வந்த சில வண்டிகளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினேன்”.

“நம்ப சுரேஷுக்கும் கையில பலமான அடி. அவனோட ஆஸ்பத்திரிக்கு போனேன்.அப்பதான் கண்டக்டர் சொல்லியிருப்பார் போல் இருக்கு இந்த ராஜேந்திரன் சார் என்கிட்ட பேசினார்.அவர்தான் என்னை கொண்டு வீட்டுக்கு விடுகிறேன் சொல்லி அழைத்து வந்தார்.”

அப்பா உடனே,”என்ன மன்னிச்சுடுடா ஆனந்த் உன்கிட்ட இருக்கிற திறமையை சரியா புரிஞ்சுக்கலை நான்”. என்றார்.

 “என்னப்ப நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு நீங்க என் நன்மைக்குதான் செய்வீங்க, சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும் எனக்கு ஐ.பி.எஸ்.ஆகணும் அதுக்கு மட்டும் உங்க சம்மதம் கிடைச்சா போதும்” என்றான் ஆனந்த்.

 “நீ என்னப்படிக்க வேணுமோ படிப்பா. உன் விருப்பம் எதுவோ அதை பண்ணு”என்ற அப்பாவை சந்தோஷமா பார்த்தனர் சகோதரர்கள் இருவரும்.

ஆதி உடனே, “ டேய் ஆனந்த் அது யாருடா விஷ்ணு இன்பார்மர்,உனக்கு இரண்டு மூன்று முறை மிஸ்டு கால் கொடுத்தது. அதை பார்த்ததும் நானும் அம்மாவும் பயந்து போயிட்டோம்” என வினவ

ஆனந்த், “ அவனா? எங்க காலேஜ்ல 2 விஷ்ணு இருக்காங்க அதுக்காக அடையாளம் தெரியரத்துக்கு அப்படி பேர் வைச்சிருக்கோம். ஒருத்தன் பெரிய புட்டிபோட்டுண்டு எப்ப பாரு தடிதடியா புத்தகத்த வெச்சுண்டு அலைவான் அவனுக்கு ‘விஷ்ணு நெர்டி’(nerdy) .இவன் இன்பார்மர்,நாங்க கிளசுக்கு கட் அடிசுட்டு சினிமாக்கு போறதும், மற்ற விஷயங்கள் பேசரதையெல்லாம் கேட்டு புரஃபசர் கிட்ட போட்டு கொடுப்பதே இவன் வேலை. அதனால இவனுக்கு இன்பார்மர். சரியான கஞ்சன் எப்போதும் மிஸ்ட் கால்தான், போன் பண்ணவே மாட்டான்”.என்றான்.

அம்மா, “அதென்னப்பா ஆனந்த் உன் மேஜை மேல இரண்டு துண்டு காகிதம் இருந்ததே ” எனகேட்க

 “அதுவாம்மா,நேத்திக்கு வாசு மாமா வந்தாரே அவர் கொண்டு வந்தார்.ஏதோ பதிவுலகத்துல ‘சவால் சிறுகதை-2011’ போட்டியாம்.இந்த துண்டு காகிதத்துல இருக்கற வார்த்தைகள் அதுல வரணுமாம்.என்னை ஏதாவது கதைக்கான கரு சொல்லுன்னு கேட்டார்.வச்சுட்டு போங்க யோசித்து வைக்கிறேன் சொன்னேன்”.

  “அடப்பாவி இவன கதை எழுதச்சொன்னா எல்லோரையும் கேட்டுண்டு திரியரானா” என்று தன் தம்பியை அம்மா செல்லமாக கடிந்து கொள்ள அனைவரும் சிரித்தனர்.

 “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” என்று சொல்லுவதற்கு ஏற்ற மாதிரி தனக்கு பிறந்த மகன்களை பெருமிதத்துடன் பார்த்தார் அந்த தந்தை குருமூர்த்தி.


---------------------------------------------------------------------------------------------------------------------





திங்கள், அக்டோபர் 24, 2011

நகர்வலம்----------கோவில்,குளம்,கச்சேரி...



கோவில்.




பெங்களூரு இஸ்கான் கோவில்.

மூன்று நிலைகளை கொண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.முதலில் பிரஹல்லாத ந்ரஸிம்மர்,அடுத்து கோவிந்தர் கடைசியில் ராதே கிருஷ்ணர்.விக்கிரகங்களின் அழகு மனதை கொள்ளை கொள்ளும்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரி இப்போழுது இக்கோவில் இல்லை.
இப்பொழுது இக்கோவிலுக்கு சென்றால் புனிதமான ஆலயம் என்று தோன்றுவதில்லை.ஏதோ சுற்றுலாதலத்திற்கு வந்துவிட்ட மாதிரி ஆகிவிடுகிறது. ஏகப்பட்ட கடைகள் ,சிற்றுண்டி சாலைகள்......என ஒரே வியாபாரமயமாகி விட்டது.அதனால் அந்த தெய்வீக அழகு குறைந்து விட்டது போல இருக்கு.






-----------------------------------------------------------------------------------------------------------------

குளம்




சாங்கி டாங்க் (SANKEY TANK)


பெங்களூரில் நகரின் மத்தியில் பல பெரிய குளங்கள் ஏரிகள் உண்டு. அதில் ஒன்றுதான் மல்லேஸ்வரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் இந்த சாங்கி டாங்க். குளத்தைவிட பெரியது ஆனால் ஏரியை விட சற்று சிறியது. மிகவும் நல்ல முறையில் பாராமரிக்கப்படுகிறது.

இந்த நீர் தேக்கத்தினை சுற்றி போடப்பட்டிருக்கும் நடைபாதையில் நடை பயிற்சிக்காக காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.


நான் நடைபயிற்சிக்கு இங்குதான் செல்கிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------------

கச்சேரி

மல்லேஸ்வரம் சங்கீத சபை,  “அனன்யா” கலையரங்கத்தில் அவ்வப்போது சங்கீத கச்சேரி நடத்துகிறார்கள். 62 வருடங்கள் முடிந்து 63ம் வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது இந்த சங்கீத சபை. மாதத்திற்கு ஒருமுறை நடைப்பெற்று வந்த கச்சேரிகள் சில மாதங்களாய் இரண்டு முறையாக மாற்றப்பட்டுள்ளது. சங்கீதப்பிரியர்களுக்கு இது சந்தோஷமான விஷயம்.

சென்ற சனிக்கிழமை “ரேவதி சதாசிவம்” அவர்களின் வீணைக்கச்சேரி
கானடாஅட தாள வர்ணத்துடன் தொடங்கி, ஹம்சத்வணி, அமிர்தவர்ஷிணி, ரவிசந்திரிகா,சிந்தாமணி என்று கச்சேரி களை கட்டியது. தமது வாசிப்பில் அனைவரையும் மெய்மறக்கச்செய்தார்.இவரது மாமனார் தீக்‌ஷிதரின் சிஷ்யபரம்பரையில் வந்தவராம்.மாமனாரே தமக்கு குரு என்றார்.

இவரிடம்தான் என் சின்ன பெண் பாட்டு வீணை இரண்டும் கற்றுக்கொள்கிறாள்.
------------------------------------------------------------------------------------------------------------------



FOLLOWERS WIDGET  முதலில் சரியாக இயங்கவில்லை .தற்போது சரி செய்துள்ளேன்.பதிவு செய்து விட்டுப்போன நண்பர்கள் மறுபடியும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------------




பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..





அன்புடன்

ரமா ரவி.









வெள்ளி, அக்டோபர் 21, 2011

சுந்தர காண்டம்--3.

கடல் கடந்து இலங்கைக்கு சீதையை தேடி வந்த அனுமன்,இலங்கையில் எல்லா இடங்களிலும் சீதையை தேடி கடைசியில் அசோகவனத்தில் ராக்‌ஷசிகளுக்கு மத்தியில் சிறைப்பட்டிருக்கும் அவரை பார்க்கிறார்.அவருடன் எப்படி பேசுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது ராவணன் தன் மனைவிகள் புடைசூழ சீதையை காண அசோக வனத்திற்கு வருகிறான்.இனி....


ஸ்ர்க்கம்--19.  சீதை.

இந்த ஸ்ர்க்கத்தில் ராவணன் சீதையை பார்க்க வந்த பொழுது அவள் எப்படி இருந்தாள் என விவரிக்கப்பட்டிருக்கின்றது.

ராவணன் தன்னை பார்க்க வருகிறான் என்றவுடன் சீதை என்ன கெடுதி நேருமோ என்று பயந்து நடுங்குகிறாள்.கைகளால் தன் உடலை மறைத்துக்கொண்டு கண்ணீர் சொரிய உட்கார்ந்திருக்கிறாள்.ராவணன் அவளை பார்த்தபொழுது,அவள் யாதொரு அலங்காரமும் இல்லாமல், சேற்றையே ஆபரணமாக தரித்து,பூமியில் வெட்டித்தள்ளப்பட்ட மரக்கிளை போலவும்,சேற்றால் பூசப்பட்ட தாமரை கொடி போல சற்று பிரகாசித்தும் சற்று பிரகாசிக்காமலும் இருந்தாள்.ஆத்ம ஞானியான இராமனையே நினைத்து,எண்ணங்களாகிய குதிரைகளை மனமென்ற ரதத்தில் பூட்டி அதி வேகமாய் ராமனுடைய சமீபத்தை அடைய முயல்பவளை போல காணப்பட்டாள்.


ஸர்க்கம்--20.  ராவணன் சீதையை பிரார்த்தித்தது.

ராவணன், “ஏன் என்னை கண்டு பயப்படுகிறாய்?இங்கே உனக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடியவர்கள் யாருமில்லை.உன்னை பார்த்ததும் எனக்கு உன்னிடத்தில் அதிக பிரீதி உண்டகிறது.பிரம்மன் உன்னை படைத்ததும் இதைவிட அழகான ருபத்தை இனி சிருஷ்டிக்க முடியாது என தன் தொழிலை விட்டுவிட்டான் போல இருக்கு,என்னிடத்தில் உனக்கு பிரியம் உண்டாகட்டும் உன்னை எனது பட்ட மகிஷியாக்குகிறேன்” என்று இப்படி பல விதமாக சீதையை பார்த்து பிரார்த்திக்கிறான்.


ஸர்க்கம்--21.  சீதை ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தது.

குரூரனான ராவணன் இப்படி சொல்லக் கேட்டு சீதை மிகவும் வருத்தமடைந்தாள்.பிறகு அவனை நேரில் பார்பது பாவம் என்பதனால் அவனுக்கும் தனக்கும் நடுவில் ஒரு சிறு துரும்பை கிள்ளிப்போட்டு,அதனை பார்த்து பேசுகிறாள். “ராவண!! என்னிடத்தில் வைத்த ஆசையை விலக்கி உனது பாரியைகளிடத்தில் வைப்பது நல்லது.ஸர்வலோக நாதனான ராமமூர்த்தியை பர்த்தாவாக அடைந்த நான் ஒரு பதிவிரதை. இதர புருஷர்களை கனவிலும் நினையாதவள்.இப்பொழுது உனக்கு என்னிடத்தில் ஆசை இதமாக தோன்றினாலும்,முடிவில் அது உன்னுடைய ஆயுளையும், ராஜ்யத்தையும், ஐஸ்வரியத்தையும் அழித்துவிடும்.உன் பொருட்டு உன் ராஜ்யத்தில் உள்ளவர்களும் அழிய வேண்டுமா?அதனால் என்னை விட்டுவிடு” என்கிறாள்.

மேலும் அவள், “ராமருக்கு நீ என்னை எடுத்து வந்தது தெரியாது என நினைக்கிறேன் இல்லாவிட்டால் இதுவரை உன்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாரா? அவர் இங்கு வந்து உன்னையும் உன் குலத்தையும் அழிப்பதற்கு முன் என்னை அவரிடம் கொண்டு போய்விட்டு விடு.அவர் உன்னை மன்னித்து விடுவார்” என்று ராவணனுக்கு புத்திமதி சொல்லுகிறாள்.


ஸர்க்கம்--22. ராவணன் சீதையைப் பயமுறுத்தினது.

சீதையின் வார்த்தைகளை கேட்கப் பொருக்காமல் ராவணன் அவளை கடும் வார்தைகளால் பயமுறுத்தி, “உனக்கு கெடுவிட்ட பன்னிரெண்டு மாதங்களில் இன்னும் இரண்டு மாதங்களே பாக்கியிருக்கிறது அதற்குள் உன்மனதை மற்றிக்கொள்ளாவிட்டால் உன்னை சமயல்காரர்கள் என் போஜனத்திற்கு பக்குவம் செய்து கொடுத்துவிடுவார்கள்” என்கிறான்.

இப்படி கோபமான ராவணனை அவனுடைய பத்தினிகள் இதமான வார்தைகளால் சமாதான படுத்தி அரண்மனைக்கு அழைத்துப் போகிறார்கள்.


ஸர்க்கம்--23. மற்றும் ஸர்க்கம்--24.  ராக்‌ஷசிகள் சீதைக்கு போதித்தது.

ராவணன் திரும்பிப்போகும் போழுது ராக்‌ஷசிகளிடம் சீதையை அதிசீக்கிரத்தில் தனக்கு ஸ்வாதீனப்படும்படி செய்யுங்கள் என சொல்லுகிறான்.அதனால் அவர்கள் எல்லோரும் சீதையை சூழ்ந்து கொண்டு ராவணனுடைய விருப்பதிற்கு இணங்குமாறு மிரட்டுகிறது இந்த இரண்டு ஸர்க்கங்களிலும் சொல்லப்படுகிறது.

அவர்களின் மிரட்டலுக்கு முதலில் பயந்தாலும் பிறகு பயப்படாமல், “ராமன் தரித்திரனாக இருந்தாலும், ராஜ்யமற்றவனாகமிருந்தாலும் அவர் என் பர்த்தா.என்னால் பூஜிக்க தகுந்தவர். மஹா பாக்கியசாலிகளான சசிதேவி இந்திரனையும், அருந்ததி வசிஷ்டரையும், ரோஹிணி சந்திரனையும், சாவித்திரி சத்தியவானையும், லோபமுத்திரை அகஸ்தியரையும்,ஸுகன்யை ச்யவனரையும், தமயந்தி நளனையும், இந்துமதி அஜனையும், மஹாப்பிரேமையுடன் சேர்ந்திருப்பது போல நானும் ரகுகுல சிரேஷ்டனான ராமனை பதியாக அடைந்து சந்தோஷிக்கிறேன்”.என்கிறாள் சீதை.

ஆனால் ராக்‌ஷசிகள் தொடர்ந்து சீதையை நீ இஷ்டப்படாவிட்டால் உன்னை கொன்று தின்றுவிடுவோம் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள்.


ஸர்க்கம்--25.  மற்றும் ஸர்க்கம் --26.  சீதை துக்கித்தது.

இப்படி ராக்‌ஷசிகளால் கொடிய வார்தைகளால் மிரட்டப்பட்ட சீதை துக்கம் தாங்காமல் ராமலக்சுமணர்கள் தன்னை பாரமல் இருப்பார்களா?என்றும் தன்னுடைய கஷ்டம் அவர்களுக்கு தெரிந்ததா ?என்றெல்லாம் வாய்விட்டு அரட்டுகிறாள்.

அவள் தனது பூர்வாஸ்திதியையும்,தற்போதய நிலமையையும் நினைத்து வாய்விட்டு அழுகிறாள்.பிறகு ராக்‌ஷசிகளின் நடுவில் ஏன் உயிரை வைத்துக்கொண்டிருக்க வேண்டும் தற்கொலை செய்து கொண்டு விடலாம் என நினைக்கிறாள்.ஆனால் இந்த உடலை விடுவது அவ்வளவு சுலபமல்ல இது பர்த்தாவிற்கு கட்டுபட்டது, தன்னிச்சையாக இந்த மாதிரி முடிவு எடுக்கத்தகாது என தெளிவு பெறுகிறாள்.
Seeta in Lanka
இருந்தாலும் தன் கஷ்டத்தை போக்க இங்கு யாருமேயில்லை என்பதை நினைத்து நினைத்து அடிக்கடி அழுது புலம்பி கண்ணீர்விட்டு கதறுகிறாள்.

லோக மாதவான சீதைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களாகிய நாமெல்லாம் எங்கே???


ஸ்ர்க்கம்--27.  திரிஜடை கண்ட ஸ்வப்னம்.

சீதை இப்படி கஷ்டப்படுவதை விபீஷணனின் பெண்ணான திரிஜடை என்பவள் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் அப்போழுதுதான் தூக்கத்திலிருந்து விழித்தாள். உடனே ராக்‌ஷசிகளை பார்த்து சொல்லுகிறாள். “துஷ்டைகளே! நீங்கள் சீதையை பயமுறுத்துவதை நிறுத்துங்கள்.நான் இப்பொழுதுதான் பயங்கரமான ஸ்வப்பனம் ஒன்றை கண்டேன். சீதைக்கு சகல மங்கலங்களும் உண்டாவதாகவும் ராக்‌ஷசர்களுக்கு நாசம் விளைகிறதாகவும் நான் கனவு கண்டேன்”.

“மேலும் கேளுங்கள்.ராகவன் லக்சுமணனுடன்,வெண்மையான வஸ்திரங்களையும்,மாலைகளையும் தரித்துக்கொண்டு கணக்கில்லாத ஹம்ஸங்களால் தாங்கப்பட்ட ஒரு தந்தப்பல்லக்கில் ஆகாச மார்க்கமாய் இலங்கைக்கு வந்து சீதையை அழைத்து செல்வதாகவும்,ராவணன் கும்பகர்ணன் ஆகியோர் தைலத்தை தேகமேங்கும் பூசிக்கொண்டு,சிவப்பு வஸ்திரம் உடுத்திக்கொண்டு தெற்கு நோக்கி போவதாகவும் கனவு கண்டேன்”.

 “இந்த மாதிரி கனவினால் சீக்கிரத்தில் லங்கைக்கு அழிவு வரப்போவது நிச்சயமாக தெரிகிறது. அதனால் சீதையை தொந்திரவு செய்யாமல் அவளிடன் சரணாகதி அடையுங்கள்”


இவ்வாறு அவள் கூறியது சீதையின் துக்கத்தினை சற்று குறைத்தது.
------------------------------------------------------------------------------------------------------------------


மாய உலகம், பதிவர் திரு ராஜேஷ் அவர்கள் தன் பதிவில் குறிப்பிட்டிருந்த முறையில் என் பதிவில் followers widget இணைத்துவிட்டேன். தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறேன்.







வெள்ளி, அக்டோபர் 14, 2011

சுந்தர காண்டம்--2.

சென்ற பதிவில் அனுமன் கடல் தாண்டி இலங்கையில் சீதையை ஒரு இடம் பாக்கியில்லாமல் தேடுவது அப்படி தேடிக்கொண்டு அவர் ராவணனுடைய அரண்மனைக்கு வருவது வரை பார்த்தோம்.

இனி...

ஸர்க்கம்--10 ராவணனுடைய அந்தப்புரம்.

புஷ்பக விமானத்தின் நடுவில் இருந்த மாளிகையில் ராவணன் நித்திரை செய்யும் இடத்திற்கு வருகிறார்.அனுமன்,அவ்விடத்தில் ஸ்படிகத்தால் செய்யப்பட்டு,ரத்தினங்கள் இழைத்துத் தேவேந்திரனுடைய சயனம் போன்ற ஒர் மஞ்சத்தினை பார்த்தார்.அங்கு நாணா வர்ணமுள்ள புஷ்பங்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன. குங்குமம், கஸ்தூரி, ஜவ்வாது, புனுகு, அத்தர், அகில்,சந்தனம் முதலிய வாஸனைதிரவியங்களின் பரிமளம் நிறைந்திருந்தது.
இவ்வாறு ராவணனுடைய ராஜ்ஜியம் சுபிட்ஷமாக இருந்ததை பார்த்து இது குபேரனுடைய ராஜதானியோ என்று ஆஞ்சனேயர் எண்ணிக்கொள்கிறார்.
மேலும் அந்த மஞ்சத்தில் ஒப்பற்ற ஆபரண அலங்கரங்களுடன் பிரதாபலங்கேசுவரன் உறங்கிக்கொண்டிருப்பதை மாருதி காண்கிறார்.அவன் உறங்குவது , “மரங்கள் புதர்கள் காடுகள் நிறைந்த மந்தரபர்வதம் அசைவற்று இருப்பது போல” இருந்ததாம்.இப்படியாக ராவணனுடைய அந்தப்புரத்தில் தேடிவிட்டு அடுத்து பான சாலைக்கு செல்கிறார் அனுமன்.

ஸ்ர்க்கம் --11  பான சாலை.

பான சாலை பல வித மாம்சங்களும்,பழங்களும் போஜன பண்டங்கள் நிறைந்ததாக இருந்ததாம்.தங்கத்தாலும்,வெள்ளியாலும் செய்யப்பட்ட பாத்திரங்கள், அவற்றில் உண்டு மீதி வைக்கப்பட்டிருந்த பலவகை பானங்கள் ஆகியவற்றை அனுமன் கண்டார்.அதையெல்லம் பார்த்த மாருதிக்கு ராவணனுடைய ஐஸ்வரியத்தினை பற்றி அடங்கா ஆச்சரியம் கொண்டார்.

ஸ்ர்க்கம் --12 மற்றும் ஸ்ர்க்கம் --13. சீதையை காணாமல் மாருதி துக்கித்தது.


இவ்விரண்டு ஸர்க்கங்களிலும் இலங்கையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் தேடியும் சீதையை காணவில்லையே என்று மாருதி துக்கிப்பது விளக்கப்பட்டுள்ளது.

 “ராகவனுடைய கோதண்டத்திலிருந்து பிரயோகிக்கப்பட்ட பாணத்தைப்போல ஒரு நொடியில் லங்கைக்கு போய் சீதையை தேடுவேன்,காணாவிட்டால் பதினாலு லோகங்களுக்கும் போய் சீதையை தேடுவேன் ,இல்லவிட்டால் ராவணனை கட்டி இழுத்துவந்து ராமனின் காலடியில் போடுவேன் என்று வீர்வாதம் பேசிவிட்டு வந்தேனே,இப்பொழுது ஜானகியை காணவில்லையே” என்று அனுமன் துக்கப்பட்டு தன்நிலை மறந்து புலம்புவார்.


பிறகு அவரே துக்கப்படுவது சிறப்பல்ல!!கவலையும் துக்கமும் தான் வந்த காரியத்திற்கு இடையுறு என்று தன்னையே தேற்றிக்கொண்டு மறுபடியும் சீதையை தேடுகிறார்.

ஸ்ர்க்கம்--14.  அசோகவனம்.

இப்படி சற்று நேரம் கவலையுற்று பிறகு தன்னையே தேற்றிக்கொள்ளும் மாருதி அங்கிருந்த அசோகவனத்தை பார்த்தார்.உடனே அவர் அந்த வனத்தில் ஏன் சீதையை ராவணன் வைத்திருக்க கூடாது என யோசனை செய்து அங்கே தேட செல்வார்.


அந்த அசோகவனத்தின் அழகை மதிற்சுவற்றின் மேலேரி பார்க்கையில் அனுமனின் சகல அவயங்களும் மகிழ்ச்சியால் பூரித்ததாம்.வஸந்த ருதுவில் முதலில் புஷ்பித்த ஆச்சா, அசோகம் ,சம்பகம் போன்ற மரங்களையும் மாந்தோப்புகளும்,அழகிய கொடிகளால் சூழப்பட்ட மரச்சோலைகளையும் மாருதி கண்டார்.அங்கு குயிகள்,மயில்கள் போன்ற பட்சிகளையும் மான் போன்ற அழகிய மிருகங்களையும் பார்த்தார்.

மேலும் கவனித்து பார்க்கையில் தங்கம் வெள்ளி மற்றும் நவமணிகளால் இழைத்த தரைகளை கண்டார். விசித்திரமான ருபங்களுடன் வெட்டப்பட்டிருந்த குளங்களின் படிகள் நவரத்தினங்களால் இழக்கப்பட்டிருப்பதை கண்டார்.அவைகளில் அமிர்தத்தை போல ருசியுள்ள ஜலம் நிறைந்திருந்தது.பொன்மயமான விருக்‌ஷங்களும்,சுவர்கலோகத்தில் மட்டுமே காணக்கூடிய விருக்‌ஷங்களும் இருந்ததை கண்ட மாருதி அந்த அசோக வனத்தின் வனப்பை பார்த்து மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.

ஸ்ர்க்கம்--15  அனுமன் சீதையை கண்டது.

இப்படிப்பட்ட அந்த அழகான அசோக வனதில் சுற்றிப்பார்கையில் தொலைவில் ஒரு சிம்சுபா விருக்ஷத்தின் அருகில் ஒரு ஸ்திரீ இருப்பதையும் அவளை சுற்றி பல ராக்‌ஷசிகள் கண்கொட்டாமல் காவல் காத்துக்கொண்டிருப்பதையும் பார்த்தார். அந்த பெண்ணின் நிலை தன் இனத்தை விட்டு பிரிந்த பெண் மான் நாய்களால் சூழப்பட்டதும் போல இருந்ததாம்.இதன் காரணத்தாலும் இன்னும் பிற காரணங்களாலும் அவளே சீதை என தெரிந்து கொண்டு அனுமன் அவள் இருந்த மரத்தின் மீது அமர்ந்து கொள்கிறார்.



ஸர்க்கம் --16.  சீதையை கண்டு அனுமன் துக்கித்தது.

லோக குருவான ரகுநாதனுடைய பார்யை,வஸிஷ்டர் போன்ற மஹரிஷிகளால் பழக்கப்பட்ட லக்‌ஷ்மணனால் பூஜிக்கப்பட்டவள்,இவளையே துக்கம் பீடிக்குமானால் காலகதியே பெரியது.அதை மீற யாராலும் முடியாது,என்றெல்லாம் அனுமன் சீதையின் நிலையை பார்த்து மிகவும் துக்கித்தார்.



ஜனக மகாராஜாவினால் செல்லமாக வளர்க்கப்பட்டு தசரத சக்கரவர்த்திக்கு நாட்டுப்பெண்ணான இவள் கஷ்டம் என்பதையே அறியாதவள். அப்படிப் பட்டவள் இங்கு வெறும்தரையில் அலங்காரங்கள் ஏதுமிலாமல் உட்கார்ந்திருப்பதை பார்த்து மாருதி மிகவும் கவலை கொண்டார்.அதிக பாரமான கப்பல் ஜலத்தில் முழுகுவதை போல சீதையின் நிலையை கண்டு அனுமான் துக்க சாகரத்தில் முழுகினாராம்.

ஸர்க்கம் --17.  ராக்‌ஷசிகள்.

இந்த ஸர்க்கத்தில்சீதையை காவல் காகும் ராக்‌ஷசிகளை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.  ஒரே காதை உடையர்வர்களும்,ஒரே கண்ணை உடையவர்களும்.,காதில்லாதவளும்,மேல் நோக்கியுள்ள மூக்கை உடையவளும்,தலை பெருத்தவளும்,இப்படி பல கோர உர்வம் கொண்டவர்களை அனுமன் பார்க்கிறார்.



இப்படிப்பட்ட கோர உருவம் கொண்டவர்களுக்கு மத்தியில் சீதை கருத்த மேகங்களுக்கு நடுவில் தோன்றி மறையும் பூர்ணசந்திரனை போல தோன்றினாளாம்.

ஸர்க்கம்--18.  ராவணன் அசோகவனத்திற்கு வந்தது.

இப்படி அனுமன்,சீதையின் நிலைமையை பார்த்து கவலைப்பட்டு அவருடன் எப்படி பேசுவது என்று யோசனை செய்து கொண்டிருக்கும் பொழுது தூக்கத்திலிருந்து விழித்து கொண்ட ராவணன் சீதையை காண அசோகவனத்துக்கு வந்தான்.


ராவணனுடன் அவன் மனைவியரும் அசோகவனத்திற்கு வந்தனர். அவர்கள் ராவணனை சூழ்ந்து கொண்டு வந்தது,தேவேந்திரன்,ஸ்திரீதிகள் சூழ வருவது மாதிரி இருந்ததாம்.அவர்கள் அணிந்திருந்த நகைகளும்,சலங்கைக்ளும் ஏற்படுத்தின சப்தம் மதுரமான துவனியில் அனுமனின் காதில் விழுந்ததாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------


அடுத்த பதிவு - ஸர்க்கம் 19--27

செவ்வாய், அக்டோபர் 11, 2011

சுந்தர காண்டம்--1.

இராமாயணத்தின் 5 வது காண்ட மாகிய இந்த சுந்தர காண்டத்தின் கதாநாயகன் ஆஞ்சனேயரே ஆவார்.

“இராமாயணம் என்கிற மாலையில் நடுநாயகமான ரத்தினம்போல் ஆஞ்சனேயர் விளங்குகிறார்” என்று சொல்லுவதற்கு ஏற்றபடி சுந்தரகாண்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரையில் ஆஞ்சனேயரின், பலம்,பரக்கிரமம்,புத்தி,  மஹிமை ஆகியவையே வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்ர்க்கம்--1. ஆஞ்சனேயர் கடலைத்தாண்டி இலங்கைக்கு போனது:

இந்த ஸர்க்கத்தில் அனுமன் கடலைத்தாண்டி இலங்கைக்கு போய் இறங்கியது விவரிக்கப்பட்டுள்ளது.



அனுமன் மஹேந்திர பர்வதத்தில் ஏறி கடலை தாண்ட தன்னை தயார் படுத்திக்கொள்ளும் போது பூர்ண பலத்தை உடைய சிம்மம் போலவும்,விஸ்தாரமான மடுவில் விளையாடும் கஜத்தை(யானை)போலவும் இருந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.

அவர் அந்த மலையில் காலை அழுத்தி தாவின பொழுது அவருடைய தொடையின் வேகத்தால் அந்த மலையில் இருந்த புஷ்பமரங்கள் யாவும் வேருடன் பெயர்ந்து அவருடன் உயரக்கிளம்பியதை பார்கையில் நெடுந்தூரம் பிரயாணம்செல்லும் ஒருவனை அவனுடைய பந்துக்கள் சிறிதுதூரம் தொடர்ந்து சென்று வழி அனுப்புவது போல இருந்ததாம்.

அனுமன் உயரக்கிளம்பி கடலை கடக்க முற்பட்டபோது,அவருக்கு மூன்று தடைகள் வந்தது.

முதலில் “மைநாகம்” என்கிற பர்வதம் (மலை)அவருடைய வழியை தடுப்பது போல மிகப்பெரியதாக வளர்ந்து நின்றது. அது இராம காரியமாக செல்லும் ஆனுமார் இளைப்பாறி செல்லவே அவ்வாறு வளர்ந்து நின்றதாம்.ஆனால் தான் போகும் காரியம் தடை படக் கூடாது என்பதற்காக அனுமன் அந்த மலையை வணங்கி அதன் அதிதி பூஜையை ஏற்று கொண்டு மலையில் இளைபாறாமல் தொடர்ந்து செல்கிறார்.

இவ்வாறாக அவர் முதல் தடையை கடந்து செல்கையில் நாகங்களுக்கு தாயான ஸுரசை என்பவள் கடல் நடுவில் பெரிய உருவத்தோடு அவரை தடுத்து, “இந்த வழியில் போகிறவர்களை தேவர்கள் எனக்கு ஆகாரமாக அனுப்பியிருக்கிரார்கள் அதனால் என் வாயில் நுழை” என்கிறாள்.அனுமான் உடனே அவள் வாயைவிட பெரிய உருவத்தை எடுக்க அவள் அதற்கு தகுந்தபடி தன் வாயை பெரியதாக திறக்கிறாள்.ஆனால் அனுமான் உடனே கட்டை விரல் அளவு தன்னுடைய தேகத்தை சுருக்கி கொண்டு அவள் வாயில் புகுந்து வெளி வந்து விடுவார்.அப்போழுது அனுமார் ராகுவின் வாயிலிருந்து வெளிப்பட்ட சந்திரனை போல் பிரகாசித்தார் என வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.



அடுத்ததாக ஸிம்ஹிகை என்கிற ராக்‌ஷஸி அவருடைய நிழலை பிடித்து இழுப்பாள் அவளையும் அனுமான் ஜெயித்து அக்கரைக்கு போய் சேர்வார்.

ஸர்க்கம் -2. லங்கையின் வளப்பம்


அனுமான் 100 யோஜனை தூரமுள்ள கடலை கடந்து அக்கரைக்கு போய் லங்கையின் அழகை பார்க்கிறார்.அந்த நகரம் திரி கூட பர்வதம் என்கிற சிகரத்தில் கட்டப்பட்டு இருந்ததாம்.இராவணனுடைய ராஜதானி, தாமரை,மலைமல்லிகை முதலிய புஷ்பங்கள் நிறைந்த அகழிகளால் சூழப்பட்டதாகவும்.தங்கமயமான உயர்ந்த மதிற் சுவர்களால் சூழப்பட்டு விஸ்தாரமாகவும் இருந்ததாம்.அதிலுள்ள வீடுகள் நவக்கிரங்கள் போலும்,சரத்காலத்து மேகங்கள் போலும் விளங்கியதாம்.



மேலும் அன்னம்,நீர்காக்கை முதலிய பறவைகளாலும், வெண்தாமரை, செங்கமலம், கருநெய்தல் முதலிய மலர்களால் பிரகாசிக்கும் நீரோடைகளையும், சாதாரன மக்கள் விளையாடும் ஸ்தலங்களையும், ஜலக்ரீடை செய்யும் மடுக்களையும்,எந்த காலத்திலும் புஷ்பங்களாலும், பழங்களாலும் விளங்கும் விருக்‌ஷங்களுள்ள, அரசர்கள் விளையாடும் தோட்டங்களையும் ஆஞ்சனேயர் கண்டார்.

பர்வத சிகரத்தில் கட்டப்பட்டு வெண்மையான வீடுகளுடன் விளங்கும் லங்கையை பார்கையில் ஆஞ்சனேயருக்கு அது ஆகாசத்தில் பறந்து செல்லும் நகரம் போல தோன்றியதாம்.இந்திரனின் அமராவதியோ என்று மலைக்கும் அழகுடன் லங்கை விளங்கியதாம்.


ஸ்ர்க்கம்--3  மாருதி லங்கா தேவதையை ஜயித்தது.


இப்படி அனுமான் லங்கையின் அழகை பார்த்துக்கொண்டே சென்று,அந்த நகரத்தினுள் பிரவேசிக்க முயல்கையில்,லங்கையை காக்கும் தேவதையான லங்கா தேவி என்கிற ராக்‌ஷச ஸ்த்ரீ அவரை தடுக்க,அனுமனும் அவள் பெண் என்பதாலும்,பெண்களுடன் சண்டைபோடக்கூடதுஎன்பதாலும், அதிகம் கோபித்து கொள்ளாமல் தனது இடது கையை மடக்கி அவளை குத்துவார். அந்த குத்தையே தாங்காமல் அவள் கீழே விழுந்து அனுமனை பார்த்து, “எந்த சமயத்தில் ஒரு வானரன் உன்னை பரக்கிரமத்தால் ஜயிக்கிறானோ அப்பொழுது ராஷசகுலத்திற்கு அழிவு நேரும் என பிரம்மா எனக்கு கூறியுள்ளார்.அந்த சமயம் வந்தது என்று நினைக்கிறேன்.நீங்கள் உங்கள் இஷ்டப்படி லங்கையில் பிரவேசிக்கலாம்” என்பாள்.




ஸ்ர்க்கம்--4  மாருதி லங்கையில் சீதையை தேடினது.


இப்படி மகா தேஜஸ் உள்ள அனுமான் சத்ருக்களை ஜயிக்க விரும்புபவன் அவர்களுடைய பட்டிணத்தில் வழியில்லாத இடத்தில் நுழைய வேண்டும் என்கிற நீதி சாஸ்திரத்தின் படி வாசல் இல்லா மதிள் சுவற்றை தாண்டி தனது இடது பாதத்தை முன் வைத்து அந்த நகரத்தில் பிரவேசிப்பார்.

பிறகு அந்த நகரத்தில் உள்ள வீடுகள் ,தெருக்கள்,பிரபுக்கள் வசிக்கும் மாடமாளிகைகள் ஆகியவற்றில் சீதையை தேடுகிறார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தோரணத்தை உடைய ராவணனுடைய அரண்மனைக்கு செல்வார்.விலை உயர்ந்த தங்கம்,ஸுவர்ணம் முதலியவைகளால் செய்யப்பட்ட உன்னதமான சுவர்களாலும்,நவரத்தினங்களிழைத்த விடுதிகளாலும்,வைரமேறின அகில்,சந்தனம் முதலிய பரிமளங்களாலும் விளங்கும் ராவணனுடைய அந்தப்புரத்தில் மாருதி பிரவேசிக்கிறார்,என்பது வரை இந்த ஸர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ர்க்கம் --5 சந்திரோதய வர்ணனை.


இப்படி இரவு வேளையில் சீதையை தேடச்சென்ற மாருதிக்கு துணை புரிந்த சந்திரனை பற்றிய வர்ணனை இந்த ஸர்க்கத்தில் காணப்படுகிறது.

லோகத்தில் மந்தரபர்வதமும்,பிர்தோஷகாலதில் ஸ்முத்திரமும், தடாகங்களில் செந்தாமரையும்,மிகுந்த காந்தி பெற்று விளங்குவதை போல சந்திரனிடம் காந்தியும் தேஜஸும் விளங்கிற்றாம்.


வெள்ளிக்கூட்டில் விளையாடும் ராஜஹம்ஸத்தை போலும்,வெண்மையான மந்தரகிரியின் குகையிலிருக்கும் சிங்கத்தை போலும்,கறுத்த மதயானை மேலிருக்கும் யுத்தவீரனை போலும்,மஹாபர்வதத்தின் வெண்மையான சிகரத்தை போலும்,தங்கபூண் கட்டிய தந்தங்கள் உள்ள மதயானைப்போலும் சந்திரன் ஆகாசத்தில் பிரகாசித்தான் என வர்ணிக்கப்படுகிறது.

ஸர்க்கம்--6  மருதி பிரபுக்களுடைய வீடுகளில் தேடியது:


இவ்வாறு சந்திரன் துணை செய்ய மாருதி சீதையை லங்கையில் தேடிக்கொண்டு போகிறார்.ராவணனின் அரண்மனையின் வெளி வாசலில் விசித்திரமான வெள்ளித்தோரணங்கள் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு விளங்கினவாம்.கணக்கில்லா யானைவீரர்களும் சோர்வில்லாத காலாள்வீரர்களும்,கொல்ல முடியாத உத்தமமான போர்குதிரைகளும், ரதவீரர்களும் அரண்மனையை இமைகொட்டாமல் பாதுகாத்தார்கள்.

வெளிப்பிரகாரத்திற்குள் பிரதான மந்திரிகளும்,அலுவலர்களும் ராவணனுடைய புத்திரர்களும்,சகோதரர்களுமான, பிரஹஸ்தன், மஹாபார்கன்,கும்பகர்ணன்,விபீஷணன்,இந்திர்ஜித்,ஜம்புமாலி போன்ற பலர் வசிக்கும் வீடுகளிலும் சீதையை அனுமன் தேடிக்கொண்டு போனார்.



ஸ்ர்க்கம்--7  ராவணனுடைய அரண்மனை.


இப்படி மாருதி சீதையை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டு போகையில் ராவணனுடைய அரண்மனைக்கு செல்கிறார்.அது சில்ப சாஸ்திர விதிகளின்படி யாதொரு தோஷமும் இல்லாதபடி கட்டப்பட்டிருப்பதை பார்க்கிறார்.அந்த அரண்மனை உத்தமமான ரத்தினங்கள்,தங்கம், வெள்ளி பவழங்ம் முதலானவைகளால் அலங்கரிக்கப்பட்டு தேவலோகமோ என்று எண்ணும் வண்ணம் இருக்கிறதாம்.




ஸ்ர்க்கம்--8   புஷ்பக விமானம்.


ராவண கிருஹங்களுக்கு நடுவில் நவமணிகள் இழைத்து உருக்கியோடவிட்ட தங்கத்தால் செய்யப்பட்ட சிற்பங்களை கொண்ட ஒரு விமானம் இருந்தது.அது ராவணனுடைய புஷ்பக விமானம் என்பதை அனுமன் தெரிந்து கொண்டார்.அது விஸ்வகர்மாவினால் செய்யப்பட்ட தேவவிமானமாதலால் பூமியில் படாமல் ஆகாச மார்கத்தில் அதி வேகமாக செல்லக்கூடியது.




அது ஒப்பில்லாத அழகு பொருந்தியது.அதில் ஒவ்வொரு வேலைப்பாடும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.அதில் அமைக்கப்பட்டிருக்கும் ரத்தினங்கள் சகல விதத்திலும் ஒப்பில்லாதவை.தேவர்களுடைய விமானத்தைக்காட்டிலும் அதி அற்புதமாக விளங்கியது.ராவணன் பிரம்மாவை குறித்து பதினாலாயிரம் வருஷம் கோர தவம் புரிந்து குபேரனை ஜெயித்து அந்த விமானத்தை அடந்தான்.

இவ்வாறு இலங்கையின் ஒவ்வொரு இடங்களின் அழகையும், ராவணனுடைய போக வாழ்க்கையும் பார்த்துக்கொண்டு அனுமன் சீதையை அங்கு தேடுகிறார்.

ஸ்ர்க்கம்--9  ராவணனுடைய அந்தப்புரம்.


அந்த புஷ்பக விமானத்தின் நடுவில் அனுமன் ஒரு சிறந்த மாளிகையை பார்த்தார்,அது ராவணனுடைய அந்தப்புரம். ஒப்பில்லாத அழகுடன் விளங்கியது. கணக்கற்ற ரக்‌ஷச வீரர்கள் ஆயுதம் தரித்து அதனை காவல்  காத்துக்கொண்டிருந்தார்கள்.அங்கே ராவணனுடை பத்தினிகளான ராக்‌ஷச ஸ்த்ரீகளும்,திக்விஜயதின் பொது ஜெயித்து கொண்டு வரப்பட்ட பெண்களும்,ராஜ கன்யைகளும்தூங்கிக்கொண்டிருப்பதை அனுமன் காண்கிறார்.

அங்கு பலவித போஜ பண்டங்களும் வாசனை திரவியங்களும் வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து எழும் வாசனையானது அனுமனை “ராவணன் இருக்குமிடத்திற்கு வா” என்று அழைப்பது போல இருந்ததாம்.
அங்கு அவர் தொடர்ந்து தேடிப்பார்க்கையில் பல நூறு ஸ்த்ரீகளை பார்க்கிறார்,ஆனால் ஜானகியை மாத்திரம் காணவில்லை.


தொடரும்....
அடுத்த பதிவில் ஸர்க்கம் 10--18 வரை..

------------------------------------------------------------------------------------------------------------------


வெள்ளி, அக்டோபர் 07, 2011

சுந்தர காண்டம்.

புராண இதிகாச கதைகள் என்றால் நம் எல்லோருக்குமே படிக்க,கேட்க மிகப் பிடிக்கும்.அதிலும் ராமர்,கிருஷ்ணர் கதை என்றால் கேட்கவே வேண்டாம். எத்தனை முறை படித்தாலும்,கேட்டாலும் ,சொன்னாலும் அலுக்கவே அலுக்காது.



ஆதிகாவியமென்று போற்றப்படும் வால்மீகி எழுதிய ராமாயணம் 7 காண்டங்களில் 24,000 சுலோகங்களை கொண்டதாக சொல்லப்படுகிறது.அந்த 7 காண்டங்களானவை:

1. பால காண்டம்

         ராமர் பிறந்தது முதல் 16 வயது வரையில் நடந்த கதையை கூறுவது பால காண்டம்.



2.அயோத்தியா காண்டம்

        ராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்தியில் வாழ்ந்தது,தசரதர், ராமருக்கு பட்டாபிஷேக ஏற்பாடு செய்ததுவரை அயோத்தியா காண்டம்.

                                                                            
3.ஆரண்ய காண்டம்

       ஆரண்யம் என்றால் காடு.ராமர் சீதையோடும்,தம்பி லக்‌ஷ்மணனோடும் காட்டிற்கு சென்று வசித்தது,சீதையை ராவணன் தூக்கிச்சென்றது வரையில் ஆரண்ய காண்டத்தில் சொல்லப்படுகிறது.




4.கிஷ்கிந்தா காண்டம்.

       ராம, லக்‌ஷ்மணர்கள் அனுமனை சந்தித்தது,வாலிவதம்,சுக்கிரீவனை வானர ராஜ்ஜியத்திற்கு ராஜாவாக்கியது ஆகியவற்றை சொல்லுவது கிஷ்கிந்தா காண்டம்.


5. சுந்தர காண்டம்.

      அனுமன் கடல் தாண்டி இலங்கைக்கு சென்று சீதையை கண்டு வருவது சொல்லப்படும் காண்டம் இது.


6. யுத்த காண்டம்
   
      ராம இராவண யுத்தம் பற்றியும் ராம பட்டபிஷேகம் பற்றியும் சொல்லுவது யுத்த காண்டம்.


7. உத்திர காண்டம்

      இதில் ராம ராஜ்ஜியம் மற்றும் ராமாயணத்தின் கடைசி காலத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காண்டம் வால்மிகி இராமாயணத்துடன் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.வால்மீகியால் எழுதப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.

 அந்தந்த காண்டங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதையை தழுவியே அந்த காண்டங்களுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சுந்தர காண்டத்திற்கு மட்டும் பெயர் கதையை தழுவி அமைக்கப்படவில்லை.அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கலாம்:

சுந்தரம் என்பதற்கு அழகு எனப்பொருள் உண்டு.இந்த காண்டத்தில் கூறப்பட்டுள்ள கதைகள் மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுப்பதாலும்,இராம பக்தனான அனுமான் கடலை தாண்டி இலங்கைக்கு சென்று சீதையை பார்த்து பேசி அந்த விவரத்தை சீதையை காணாமல் மிகக் கவலையாக இருக்கும் இராமரிடம் தெரிவித்த விவரங்களை மிக அழகாக கூறப்பட்டுள்ளதால் சுந்தர காண்டம் என் பெயர் வைத்திருக்கலாம்.

மேலும் இந்த காண்டத்தில் அனுமான் கடலை தாண்டினது இலங்கையின் வனப்பு ஆகியவை மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.



இப்படிப்பட்ட இந்த சுந்தர காண்டத்தை பாராயணம் (படிப்பது) மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.இதை வீட்டில் பூஜித்து படிப்பதால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் அஷ்டஐஸ்வரியம் பெருகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.இதனை பாராயண செய்ய 15 க்கும் மேற்ப்பட்ட முறைகள் வாயு புராணத்தை சேர்ந்த உமாஸம்ஹிதையில் ஸ்ரீ பார்வதி தேவிக்கு பரமசிவனால் உபதேசிக்கப்பட்டுள்ளது.

சுந்தர காண்டம் மொத்தம் 68 சர்கங்களை கொண்டது. இதில் கூறப்பட்டுள்ள கதையை பற்றிய விவரங்கள் மற்றும் வர்ணனைகள் ஆகியவற்றை சில பதிவுகள் ஒரு தொடராக எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதன் படி அடுத்த பதிவில் சுந்தர காண்டத்தின் முதல் 9 சர்கங்களை பற்றி பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: இந்த பாராயண முறைகள் ‘லிப்கோ’ பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஸூந்தர காண்டம்” என்ற புத்தகத்தில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
யார் வேண்டுமானாலும் படிக்கலாம். மிகச்சுலபமான முறையில் விளக்கப்பட்டிருக்கிறது.