எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். 4 /5 ம் வகுப்புகளில் இருந்த போது ஆனந்த விகடன்,கல்கி குமுதம் போன்றவற்றில் ஜோக்குகள் படிக்க தொடங்கி,பிறகு மெதுவாக சிறுகதைகள் படிக்கும் பழக்கமும் வந்தது. அதன் பிறகு 12ம் வகுப்பு படிக்கும் பொழுது நாவல்கள் படிக்க தொடங்கினேன்.முதலில் எனக்கு துப்பறியும் நாவல்கள்தான் அதிகம் பிடித்தது. கல்கி அவர்களின் நாவல்கள் படிக்க ஆரம்பித்ததும்,சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது.பிறகு மெதுவாக சமூக நாவல்கள்,அறிவியல் சம்பத்தப்பட்ட புத்தகங்கள் என எல்லாவற்றையும் படிக்க தொடங்கினேன்.
கல்லூரி படிப்பு முடித்ததும் அரசு பணியில் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன உத்தரவிற்காக காத்திருந்த போது நான் அதிகமாக படித்தேன்.காலையில் மாவட்ட நூலகத்திற்கு சென்று இரண்டு புத்தகங்களுடன் திரும்பி வந்து உடன் படிக்கத்தொடங்கி விடுவேன். இரண்டு நாட்களில் இரு புத்தகங்களையும் முடித்துவிட்டு வேறு இரு புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பேன்.சில சமயம் இரு புத்தகங்களையும் ஒரே நாளில் முடித்துவிட்டு காலையில் திரும்ப நூலகம் செல்வதற்காக ஆவலுடன் காத்திருந்ததும் உண்டு.
சுமார் 25 வருடங்களுக்கு முன் பெரும்பாலும் எல்லோருக்கும் அரசு,அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலேயேதான் வேலை இருக்கு. அதனால் இரவு தாமதமாக வருவது எல்லாம் கிடையாது.8 அ 8.30 மணிக்குள்ளேயே வீட்டு வேலைகள் முடிக்கப்பட்டு,சிறுது நேரம் வானொலியில் பாடல்கள் பிறகு செய்திகள் கேட்டுவிட்டு 9.30 மணிக்குள் தூங்கிவிடுவோம். இப்பொழுது இருப்பது போல தொலைக்காட்சி,கணணி எல்லாம் கிடையாது. அதலால் வானொலிப்பெட்டிதான் பொழுது போக்கு சாதனம்.
சில சமயம் நூலகத்திலிருந்து எடுத்து வரும்புத்தகத்தை பகலில் படிக்க முடியவில்லை என்றால் இரவு படிக்க ஆரம்பிப்பேன்.ஆனால் வீட்டில் வேலைகள் முடித்து எல்லோரும் தூங்கச்சென்று விட்ட பிறகு என்னால் படிக்க முடியாது. இரவு கண் விழித்து படித்தால் உடல் நலத்திற்கு தீங்கு என்று அம்மா இரவு படிப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.சுவாரசியமாக படித்துக்கொண்டிருக்கும் எனக்கு புத்தகத்தை மூடவே மனம் வராது. இருந்தாலும் விளக்கு அணைத்து விட்டு எல்லோரும் படுத்துக்கொண்டு விட்டால் என்னால் படிக்க முடியாது.நானும் படுத்துகொண்டு விடுவேன் ஆனால் தூக்கம் வராது.அடுத்து கதையில் என்ன நிகழ்திருக்குமோ என்கிற ஆர்வம் என்னை தூங்கவிடாது.
சற்று பொறுமையாக எல்லோரும் தூங்குவதற்கு காத்திருப்பேன். பிறகு மெள்ள எழுந்து அடி மேல் அடி வைத்து சத்தம் போடாமல் பக்கத்து அறைக்கு சென்று படிக்க ஆரம்பிப்பேன்.அறையின் மூலைக்கு சென்று சுவற்றில் சாய்ந்து கொண்டு தரையில் சரிந்து உட்கார்ந்து கொண்டு மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவேன். அவ்வளவுதான் புத்தகத்தை தவிர உலகில் வேறு எதுவே இல்லை என்பது போல ஒரு உணர்வுதான் நான் என்னையே மறந்திருப்பேன்.பிறகு முழுவதும் படித்து முடித்த பிறகு கூட சுய நினைவுக்கு வர மாட்டேன். முடிவுப்பகுதியை மறுபடியும் படிப்பேன்.
அதன் பிறகு புத்தகத்தை மூடும் பொழுது ஏதோ பெரியதாக சாதித்துவிட்ட மாதிரி இருக்கும்.ஒரு சில வினாடிகள் என்னைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்கிற உணர்வே இருக்காது. பிறகு மெல்ல நிசப்தமான அந்த சூழ்நிலையை உணர்வேன். நிசப்தம் என்றால் அப்படி ஒரு சத்தமற்ற தன்மையாக இருக்கு. அதை உணர்ந்த உடன் அடி வயற்றிலிருந்து ஒரு பயம் உடல் முழுவது ஆக்கிரமித்துக்கொள்ளும். இடத்திலிருந்து அசைய கூட முடியாது. அந்த பயத்தை உணர்ந்தவுடன் உடல் வியர்த்து நடுங்க அரம்பிக்கும். மின் விசிறி சுழலுகிறதா என்று பார்பதற்கு தலையை நிமிர்த்த கூட தைரியம் இருக்காது. மெதுவாக கண்களை மட்டும் உயர்த்தி மின் விசிறி சுற்றுவதை பார்க்கும் பொழுது அத்தனை நேரம் காதுகளில் விழாமல் இருந்த அதன் சத்தம் மெதுவாக காதுகளில் விழுந்து எனது பயத்தை மேலும் அதிகரிக்கும். பிறகு மெதுவாக கடிகார சத்தம், சுவற்றுக்கோழி கத்தும் சத்தம், தெருவில் நாய் குரைக்கும் சத்தம், எங்கோ தூரத்தில் வேகமாக செல்லும் ஒரே ஒரு வாகனத்தின் சத்தம் என்று மெதுவாக ஒவ்வொரு சத்தமாக கேட்கும்,
ஆனால் எல்லா சத்தங்களையும் மீறி அந்த இரவின் நிசப்தம் இருக்கிறதே அதைதான் அதிகம் உணர முடியும்.அந்த உணர்வு, அந்த பயம்...என்னை இருக்கும் இடம் விட்டு நகர விடாது. அதுவும் ஏதாவது திகில் நாவல் அல்லது துப்பறியும் நாவல் படித்திருந்தால் போச்சு.................அம்மா அப்பாவை கூப்பிடலாம் என்று மெதுவாக கூப்பிட முயன்றால் தொண்டை அடைத்துக்கொள்ளும் வாயிலிருந்து சப்தமே வராது. யாராவது எழுந்திருக்க மாட்டார்களா என்று மனது அடித்துக்கொள்ளும். அப்படியே உட்கார்ந்து இருப்பேன்.
என்னை மீறி தூக்கம் வரும் பொழுது அப்படியே சரிந்து கையை தலைகாணியாக வைத்துக்கொண்டு தூங்கிவிடுவேன்.காலையில் “அப்படி என்ன புத்தகம் வேண்டியிருக்கு? உடம்புக்கு வந்தால் என்ன செய்வது?விளக்கை கூட அணைக்காமல்”, என்கிற அம்மாவின் பாசமான குரலைக் கேட்கும் போது என்னுடைய பயமெல்லாம் காணாமல் போயிருக்கும். அடுத்த புத்தகம் எப்பொழுது படிக்கலாம் என்கிற ஏக்கத்தோடு எழுந்திருப்பேன்.

இது மாதிரி ஒரு நாள் மட்டும் இல்லை பல நாட்கள் படித்திருக்கிறேன்.அம்மா திட்டுவார்கள் என்று தெரிந்தும்,என்னுடைய பயம் தெரிந்தும் நாவல் படிப்பதில் இருந்த ஆர்வம் என்னை படிக்க தூண்டியது.
பல வருடங்கள் கழித்து சென்ற வாரம் ஒரு நாள் இது மாதிரி நள்ளிரவு தாண்டும் வரை ஒரு புத்தகம் படித்தேன்.சுமார் 1 மணி வரை படித்துவிட்டு புத்தகத்தை மூடும் பொழுது எனக்கு என்னுடைய பயம் நினைவுக்கு வந்தது. ஆனால் சிறு வயதில் நான் உணர்ந்த பயத்தை இப்பொழுது உணரவில்லை. காரணம் .......வயது தந்த முதிர்ச்சியா? .அல்லது அப்பொழுது இருந்த அந்த நிசப்தம் இப்பொழுது இல்லாதாலா? தெரியவில்லை.
முன் மாதிரி இல்லாமல், தற்போது தனியார் துறை, மென்பொருள்துறை என்று பணி புரிவர்கள் அதிகம். பணி முடித்து இரவு தாமதமாக வருபவர்களும் அதிகம்.அதனால் நள்ளிரவு தாண்டியும், ஒரிரு வீடுகளில் கேட்ட தொலைக்காட்சி சப்தம், அடிக்கடி இல்லை என்றாலும், அவ்வப்பொழுது செல்லும் வண்டிகளின் சப்தம் என்று,.....அன்று நான் அனுபவித்த அந்த நிசப்தம் இப்பொழுது என்னால் உணர முடியவில்லை.
சரி அப்படி என்ன புத்தகம் படித்தேன், இரவு கண்விழித்து என்று கேட்கிறீர்களா? சுஜாதா அவர்களின் 24 ருபாய் தீவு. முன்பு எப்பொழுதோ படித்தது. மீண்டும் படித்தேன். அவருடை புத்தகங்களை எத்தனை முறை திருப்பிப்படித்தாலும் ஓவ்வொரு முறையும் முதல் முறை படிக்கும் பொழுது எற்படும் அந்த விறு விறுப்பு குறையாமல் இருக்கிறது.
நன்றி
ரமாரவி.