செவ்வாய், மார்ச் 19, 2013

கோடை விடுமுறை...






 விடுமுறை என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். குழந்தைகளுக்கோ பள்ளிக்கூடம் கிடையாது, பாடம் படிக்க வேண்டாம் இஷ்டபடி தூங்கி எழலாம், விளையாடலாம் என்று சந்தோஷம்.. 

பெரியவர்களுக்கு  இயந்திரத்தனமான வாழ்விலிருந்து ஒரு சிறிய மாற்றம் என்கிற சந்தோஷம்.

ஒரு வருடத்தில் பல முறை நமக்கு விடுமுறை கிடைக்கும்.ஆனால் கோடை விடுமுறை என்றாலே தனி சந்தோஷம்தான். ஏன்??

குழந்தைகளைப் பொருத்தவரை நீண்ட நாட்கள் விடுமுறை கிடைக்கும். பள்ளிக்கூடமோ,கல்லூரியோ திறந்தவுடன், புதிய வகுப்புக்கு போகலாம்,புதிய பாடங்களை படிக்கலாம் என்கிற சந்தோஷம்.  பெரியவர்களுக்கு காலையில் எழுந்து வேலைகளை பரபரப்பாக செய்ய வேண்டாம். சற்று நிதானமாக செய்யலாம்.


எங்காவது சொந்த ஊர்களுக்கோ அல்லது கோவில் போன்ற இடங்களுக்கோ, மலை வாசஸ்தலங்களுக்கோ பயணங்கள் மேற்கொள்ள ஏதுவாக அதிக நாட்கள் கிடைக்கும். வாரக்கடைசி மாதிரி அவசர அவசரமாக பயணம் மேற்கொள்ள தேவை இல்லை. அத்துடன் விருந்தினர் வருகை மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.



இத்தகைய பெருமைகள் வாய்ந்த கோடைவிடுமுறையை நானும் அனுபவிக்கலாம் என்றிருக்கிறேன். சொந்த ஊருக்கு செல்லவும்,சில பயணம் மேற்கொள்ளவும் இருப்பதால் பதிவிற்கு ஒரு சில வாரங்கள் விடுமுறை. நேரம் கிடைக்கும் பொழுது நண்பர்களின் பதிவுகளை படித்து கருத்திடுகிறேன்.
















நன்றி

ரமாரவி.

-----------------------------------------------------------------------------------------------------------------------
படங்களுக்காக- -கூகிளுக்கு நன்றி .

செவ்வாய், மார்ச் 12, 2013

கோவில் தரிசனம்--- வரம் அருளும் விஜய ராகவப்பெருமாள். (திருப்புட்குழி)





தொண்டை நாட்டு (காஞ்சிபுரம்)  திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பக்குழி விஜயராகவ பெருமாள் கோவில் மிகவும் விஷேசமானது.


துளசி டீச்சர் பதிவில். புள்ளிருக்கு வேளூரை பற்றி குறிப்பிட்டதை படித்த பொழுது எனக்கு திருப்பக்குழி பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு.






காஞ்சிபுரம் திவ்ய தேசங்களுக்கு செல்லும் பொழுது சாதாரணமாக இந்த கோவிலுக்கு செல்வது விடுபட்டு போய்விடும். காஞ்சிபுரத்திலிருந்து சற்று தொலைவில் இருப்பதால் (அதாவது சுமார் 14கி.மீ இருக்கும்).அங்கு சென்று திரும்ப நேரமாகிவிடும் என்பதால் சில சமயங்களில் இந்த கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடிந்ததில்லை.



ஆனால் கடந்த வருடத்தில்  4 முறை இந்த கோவிலுக்கு சென்று வந்தோம். இந்த கோவில் பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் பாலுச்செட்டி சத்திரத்திற்கு அருகில் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள்ளே சென்றால் சுமார் 100 மீட்டர் தொலைவிலேயே கோவில். அதனால் சென்னைக்கு சென்று வந்த சமயங்களில் எல்லாம் இந்த பெருமாளை சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.






 ராமர் ஜாடயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்த இடம் என்று சொல்லப்படுகிறது. அமைதியான சிறிய ஊர். மிக அழகிய கோவில் அருகிலேயே கோவில் புஷ்கரணி. (ஜாடாயு புஷ்கரணி என்ற பெயர்.) மூலவர் விஜய ராகவ பெருமாள். தாயார் மரகதவல்லி. சாதாரணமாக கோவில்களில் பெருமாளுக்கு வலது பக்கம் ஸ்ரீதேவி தாயாரும் இடது பக்கம் பூமிதேவி தாயரும் இருப்பார்கள் அனால் இந்த கோவிலின் விஷேசம் என்னவென்றால் ஸ்ரீதேவி தாயார் இடது பக்கமும்,பூமிதேவி தாயார் வலது பக்கமும் காட்சி கொடுக்கிறார்கள். இதற்கு காரணம்--




ராமர் ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்த போழுது அந்த அக்கினியின் ஜீவாலையை தாங்க முடியாமல் ஸ்ரீ தேவி தாயார் இடது பக்கம் சென்று நின்று கொள்ள பூதேவி தாயார் பெருமாளின் வலது பக்கம் வந்து  சற்று தலையை சாய்த்த மாதிரி நின்று கொண்டாராம். இதனால் இங்கு தாயார் இருவரும் இடம் மாறி நின்று அருள் பாலிக்கிறார்கள்.











இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஒவ்வொரு அம்மாவாசைக்கும் செய்யப்படும் பூஜை.குழந்தை பேறு இல்லாது பெண்கள் அம்மாவாசை அன்று இந்த கோவிலில் நடத்தப்படும் சிறப்பு புஜையில் கலந்து கொண்டு, அப்பொழுது அளிக்கப்படும் வறுத்த  பயிரினை நீரில் நினைத்து வயிற்றில் கட்டிக்கொண்டு கோவிலிலேயே ஒரு நாள் இரவு தங்குகிறார்கள். காலையில் எழும்பொழுது அந்த பயிறு முளைவிட்டிருந்தால் அவர்களுக்கு குழந்தை பேறு நிச்சயம் என்பது ஒரு ஐதீகமாக வழங்கப்பெற்று வருகிறது.







திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலம்.

நாங்கள் சென்ற போது படங்கள் எடுக்கவில்லை. அதனால் படங்களை கூகிளிலிருந்து எடுத்து கொடுத்திருக்கிறேன்.



நன்றி
ரமா ரவி.

-------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், மார்ச் 05, 2013

பொருளாதார சுதந்திரம்


ஒரு சில மாதங்களுக்கு முன் வீட்டில் இருக்கும் பெண்களின்  (அதாவது house wife) சேவைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு கருத்து உருவாகி அதனை ஆதரித்தும் எதிர்த்தும் பெரிய அளவில் விவாதங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தது.



இது மற்ற செய்திகளை மாதிரியே கொஞ்சம் நாட்களில் ஓய்ந்துவிடும், பத்திரிக்கைகளுக்கு வேறு சுவாரசியமான செய்தி கிடைத்தால் அதற்கு தாவிவிடுவார்கள் என்று, அந்த சமயத்தில் எனக்கு இது பற்றி பெரிய கருத்து ஏதும் இல்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் இதைப்பற்றி அதிகம் நினைத்து இக்கருத்தைப் பற்றி எனக்குள்ளாகவே அதிகம் விவாதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம்?------------



எனக்கு மிகவும் தெரிந்த பெண், எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர். என்னிடன் அவருடைய சொந்தப் பிரச்சனைகளை விவாதிக்கும் அளவிற்கு நெருக்கமானவர்.  அவர் சில தினங்களுக்கு முன் என்னிடம், “அக்கா, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏதோ அவர்களுடைய சேவையை போற்றி பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்களே அது மாதிரி ஏதாவது சட்டம் வந்தால் நன்றாக இருக்கு.” என்றார். நான் ஏன் எனக் கேட்டதற்கு அவர் விடை அளித்தத்தை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.



அவருக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. திருமணத்திற்க்கு முன்னும் பின்னும் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாததால் வேலைக்கு செல்லவில்லை. திருமணம் ஆன பொழுது வீட்டில் பெரியவர்கள் இருந்ததால் வீட்டு நிர்வாகம் எல்லாம் அவருடைய கணவரும் மாமனார் மாமியாரும் பார்த்து கொண்டு விட்டதால் அவர் மரியாதையின் நிமித்தம் நிர்வாகத்தில் தலை இடவில்லை. பெரியவர்களின் மறைவுக்கு பிறகு தற்பொழுது கடந்த சில வருடங்களாக தனியாக குடித்தனம். தனியாக என்று ஆகியவுடன் வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டி வந்தது. இரு குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வீட்டு நிவாகத்தையும் திறம்படத்தான் செய்தார், ஆனால் அவர் செய்த ஒரே தவறு வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கும் பொழுது ஒரு மரியாதை நிமித்தம் கணவரிடம் கேட்டுக்கொண்டு செய்வார். அதை அவர் கணவர், மனைவிக்கு ஓன்றும் தெரியவில்லை அதனால் தன்னை கேட்கிறார் என நினைத்து பணத்தை எண்ணி எண்ணி கொடுக்க ஆரம்பித்தார். மனைவி இந்த செலவுக்காக பணம் என்று சொல்லி கணவருக்கு அதில் கணவருக்கு விருப்பமிருந்தால் மட்டுமே அதற்குரிய பணம் கொடுக்கப்படும். மனைவியின் ஆசைகளோ தேவைகளோ கண்டு கொள்ளப்படாமல் போயிற்று..



 (அவருடைய வார்தைகளிலேலே சொல்கிறேன்)-  “ஒரு door mat ,screen cloth  அல்லது செருப்போ வாங்குவதற்கு கூட அவரிடம்தான் கேட்க வேண்டும். அவருடைய அனுமதி கிடைத்த பிறகுதான் வாங்க முடியும். மேற்கொண்டு கேள்வி கேட்டால் நான் நம்முடைய எதிர்காலத்திற்குதான் சேர்த்து வைக்கிறேன் என்று கோபித்துக்கொள்வார்.”  என்றார். அவர் மேலும் தொடர்ந்து,  “பெண் குழந்தையை வைத்துக்கொண்டு அதனுடைய தேவைகளை வாங்குவதற்கு கூட அவரிடம் கேட்க வேண்டியிருக்கு, அக்கா! என் கையில் பணம் இருந்தால் நான் ஒன்றும் அதிகமாக செலவு செய்துவிடப் போவதில்லை முக்கியமான தேவைகளை நானே  நிறைவேத்திக் கொள்ளலாம்”.



 “என் கணவர் மிக நல்லவர், கெட்ட பழக்கங்கள் கிடையாது. சாப்பாடிற்கோ துணிமணிக்கோ கஷ்டம் கிடையாது. குழந்தைகளையும், நிறைய பணம் செலவு செய்து  பிரபலமான பள்ளிகளில் படிக்க வைக்கிறார். எல்லாம் சரிதான் ஆனால் எனக்கு என்று கையில் பணம் இருப்பதில்லை.
எனக்கு என்று கொடுக்கப்படும் பணத்திற்கு நான் யாருக்கும் கணக்கு சொல்ல வேண்டியது இல்லை அது மாதிரி ஒரு நிலைமைக்காக நான் ஏங்குகிறேன். எனக்கு எல்லாம் இருந்தும் நான் சந்தோஷமாக இல்லை.” என்றார்.



 அந்த பெண்ணிடம், பேசுவதற்கு முன் எனக்கு இது பற்றி எந்த விதமான கருத்தும் இல்லை. அவருடைய பேச்சை கேட்ட பிறகு நான் நிறைய யோசிக்க ஆரம்பித்தேன். அவருடைய ஆதங்கம் எனக்கு நன்றாக புரிந்தது.



முதலில் அந்த பெண் இது விஷயமாக என்னிடம் பேசியதும் நான் நினைத்தது --- சாப்பாட்டிற்கும் துணி மணிக்கும்தான் கஷ்டம் இல்லையே பின் பேசாமல் போக வேண்டிதானே! இது எல்லாம் ஒரு கஷ்டமா? என்று.!! ஆனால் பேச்சின் இடையே அந்தப்பெண் சொன்ன ஒரு விஷயம் என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அவர் சொன்னது, “அக்கா அன்று குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து போனேன். திரும்பி வர bus  கிடைப்பது தாமதமாகிவிட்டது. இருட்ட ஆரம்பித்துவிட்டது. அதனால் ஒரு ஆட்டோ பிடித்து வந்தேன். நாங்கள் வருவதற்குள் என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்துவிடார். நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்குவதை பார்த்துவிட்டு வாசலிலேயே நிற்க வைத்து சத்தம் போட ஆரம்பித்தார். அனாவசியமாக செலவு செய்து ஆட்டோவில் வர வேண்டுமா? வீட்டிலேயே இருக்க வேண்டிதானே அப்படி இப்படி என்று! நான் கோவிலுக்கு கூடவா போகக்கூடாது? அந்த சுதந்திரம் கூடவா எனக்கு இல்லை??  நான்  வெளியே சென்றால் எதாவது செலவு செய்து விடப்போகிறேனே என்று வெளியே செல்ல கூட அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற மாதிரியான ஒரு கட்டாயத்திற்கு நான் உட்படுத்தப்பட்டு விட்டேன். அப்பொழுதுதான் நினைத்தேன் எனக்கு என்று பணம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே இப்படி பயந்து கொண்டு இருக்க வேண்டாமே என்று”.



உண்மைதான். ஒரு புறம் பெண்கள் உடல் ரீதியான கொடுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள், இன்னொறு புறம் வெளியே தெரியாத இது மாதிரியான மனரீதியான கொடுமைக்கும் ஆளாகிறார்கள். அந்தப்பெண்ணிடம் பணம் இருந்தால் அதுவும் அவருடைய பணம் என்றிருந்தால் கணவர் கேள்வி கேட்க மாட்டார் அல்லவா? கணவர் கேள்வியே கேட்க கூடாது என்று இல்லை. அனாவசியமாக செலவு செய்யும் பொழுது கணவரோ, மனைவியோ  யாராக இருந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும்.. நியாயமான செலவுகள் செய்யும் பொழுது ஒரு சுதந்திரம் இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப்போல பயந்து கொண்டே  வாழ்கையை கடத்த முடியாது. அவர் தான் சந்தோஷமாக இல்லை என்று சொன்ன போது முதலில் அவர் சுயநலவாதியோ என்று நினைத்தேன். ஆனால் யோசித்து பார்த்த பொழுது அந்த பெண்ணுடைய நிலைமையில் இருந்தால் அது எவ்வளவு கஷ்டம் என்று புரிந்தது. இது மாதிரி எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.



அதனால் பொருளாதர சுதந்திரம் பெண்களுக்கு கட்டாயம் தேவை. அதற்கு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு (house wives) அவர்களுடைய சேவைக்கு சம்பளம் கொடுக்க வேணும் என்று சொல்வதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை. அதற்கு சட்டம் ஏற்றி அதனை நடை முறை படுத்துவது எல்லாம் சாத்தியமில்லை. விவாகரத்தான எத்தனை பெண்களுக்கு ஈட்டுத்தொகை (compensation) சரியாக கொடுக்கப்படுகிறது? நீதி மன்றத்தில் உத்தரவுதான் போட முடியும். ஒவ்வொருத்தரின் பின்னால் போய் பணத்தை பிடுங்கியா கொடுக்க முடியும்? அது மாதிரிதான் இந்த சேவைக்கு ஊதியமும். சட்டம் எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை.



பெண்கள் தங்களுடைய வாழ்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள நடத்தும் போராட்டங்களில் ஒன்றாக இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நான் யோசித்து பார்த்ததில் எனக்கு தோன்றியது.------



1. பெண்கள் நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து தங்கள் பொருளாதார சுதந்திரத்தினை நிலை நிறுத்திக்கொள்ளலாம் .


2. வேலைக்கு செல்லாத பெண்கள் தங்கள் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துச்சொல்லி புரிய வைத்து ( போராட வேண்டும் என்ற நிலைமையில் இருப்பவர்கள்  போராடி) தங்களுடைய சுதந்திரத்தை நிலை நிறுத்திக்கொள்ளலாம்.








வேலைக்கு போகாது வீட்டில் இருக்கும் பெண்கள் இப்படி என்றால், வேலைக்கு போய் சம்பாதித்தும் பொருளாதர சுதந்திரம் இல்லாத பெண்கள் எத்தனை ஆயிரம்  பேர்களோ தெரியவில்லை.??



நன்றி
ரமாரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், பிப்ரவரி 28, 2013

ராம கதை.






சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஏதாவது சுவாரசியமாக இருக்கா என்று சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். ஆஸ்தா டிவியில் தேவகி நந்தன் தாக்குர் என்பவரின் ராம கதையை  (ஹிந்தியில்) ஒளிபரப்பு செய்தார்கள். ஹிந்தி சுமாராகத்தான் புரியும் என்றாலும், ராமகதை ஆயிற்றே என்பதனால் சற்று கவனித்தேன்.


ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த ஒரு பெரிய திடலில் ராமகதையை சொல்லிக்கொண்டிருந்தார் மஹாராஜ். அப்பொழுது அவர், “ராமகதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். தினமும் இதை கேட்டு அனுபவிக்கிறோம், ஆனாலும் இதை கேட்பதற்கு இத்தனை ஆயிரம் மக்கள் வருவதேன்? ”என்று கேட்டார். பிறகு தொடர்ந்து அவரே “ராமகதை தியாகத்தின் கதை. தியாகிகளின் கதை. தியாகத்தின் கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. அதனால் நாம் அதை திரும்ப திரும்ப கேட்க விரும்புகிறோம்” என்றார்.


உண்மைதான். ராமகதையை எத்தனை முறை கேட்டாலும் நமக்கு அலுப்பதில்லை. கம்பராமாயணத்தை படித்து புரிந்து கொள்ளும் அறிவு எனக்கில்லை. அதற்கு நான் இன்னும் தமிழ் கற்க வேண்டும். உரைநடையில் உள்ள ராமாயணத்தை பல முறை படித்திருக்கிறேன். சென்ற மாதம் மறுபடியும் ராமாயணத்தை படித்தேன். துளி கூட அலுக்க வில்லை. புத்தகத்தை கீழே வைக்க வேண்டும் என்கிற எண்ணமும் எழவில்லை. அப்படி ஒரு அனுபவம். மஹாராஜ் சொன்ன மாதிரி தியாகத்தின் கதை என்பதினாலா? அல்லது எழுதினவருடைய வரம் வாங்கி வந்த எழுத்துகளினாலா?

இரண்டுமே சேர்ந்ததனால் எனக்கு ஒரு அற்புதமான படிப்பானுபவம் கிடைத்தது.

வாலி அவர்களுடைய அவதாரபுருஷன்  தொடராக வந்த போது படித்திருக்கிறேன். அவருடைய அந்த எளிமையான கவிதை நடை என்னைப்போன்ற பாமரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

அவதாரபுருஷனை மீண்டும் படிக்கும் பாக்கியம் சென்ற மாதம் கிடைத்தது.
மிகவும் நிதானமாக ரசித்து படித்தேன். அவருடைய எழுத்துக்களைப்பற்றி சொல்ல எனக்கு எந்தவித அருகதையும் கிடையாது. இருந்தாலும் நான் படித்து பிரமித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆரம்பத்திலேயே அற்புதமான முத்திரையை பதித்திருப்பார்.


நானொரு
தட்டெழுத்து யந்திரம்.
இதைத் தட்டித் தட்டித்
தமிழ் வடிப்பது 
அந்த
எட்டெழுத்து மந்திரம்!
--

இந்த எழுத்துக்கள்
எடுத்துக் காட்டுவது அரிமுகம்!
எதற்கு அதற்கோர் அறிமுகம்?
---


ஒரு எழுத்தினை மட்டும் மாற்றி எப்படி ஒரு அர்த்தத்தை கொண்டு வந்து விட்டார் என்று பிரம்மிக்க ஆரம்பித்தவள்தான். என் பிரமிப்பு புத்தகத்தை முடித்த பின்னும் தொடர்ந்தது.


இன்னொன்று---


ஒப்பனை முகங்களை
ஒப்புக்கும் உப்புக்கும்
பாடியவன்;
அந்தத்
தப்புக்குப் பிராயச்சித்தமாய்-
ஓர் ஒப்பில்லா முகத்தைத்
தப்பில்லாத் தமிழில் பாட
வருகிறேன்.
---

திருமாலைப்பற்றி சொல்லும் போது தேவர்களைப்பற்றி  எழுதியிருப்பார்.....



பொன்னுலகில் - ஒரு
பிரார்த்தனைக் கூட்டம்
நடக்கிறது.
அவர்கள்-
காத்துக் கொண்டிருக்கிறார்கள்-
அவர்களைக்
காத்துக் கொண்டிருப்பவனுக்காக!
----


கோசலை ராமருக்கு சோறு ஊட்டுமிடத்தில் ஒரு சிறப்பு.



தேயும் நிலாவைத்
தாயும் காட்டி -
தேயா நிலவுக்குச்
சோறு ஊட்டினாள்.
--

அழகு நிலாவை
இடுப்பில் ஏந்தி
அழுக்கு நிலாவை
அழைத்தாள் கோசலை.
---



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ராமரும் சீதையும் முதலில் பார்த்துக் கொள்ளுவதை விவரித்து,
மிக அழகாக சொல்லியிருப்பார்..


பார்வைகளின் வழியே
நடந்து முடிந்தது - இதயங்களின்
பண்ட மாற்று !

ராமனின் இதயம் 
மாடத்திலிருந்து பார்க்க
சீதையின் இதயம் 
தெருவோடு நடந்தது!
---


பரசுராமன் ராமரிடம் தோற்று போய் காட்டை நோக்கி செல்வதை விவரிக்கையில்--


பரசுராமன் -
பனிமலை நோக்கிப் போனான்;
அரசு ராமன் -
அயோத்தி நோக்கிப் போனான்!
-----


கைகேயிக்கு மந்திரை உபதேசித்ததும் கைகேயி தரையில் வீழ்ந்து கிடக்கும் கோலத்தை விவரித்து..



கைகேயி எனும்
கனக நிலா...
மங்கலப் பொருட்களைக்
களைந்து
மலர்ப்படுக்கியிலிருந்து
எழுந்து -
மந்திரையின் பேச்சுப்படி
தரையில் விழுந்தது!

அக்கணமே..
படுத்துக் கிடந்த ராவணன் விதி -
படுக்கையைவிட்டு எழுந்தது!  
---

ராவணனுடைய அழிவு காலம் நெருங்கி விட்டதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்?



அசோகவனத்திற்கு வரும் ராவணன் சீதையைப் பார்த்து கேட்கிறான் -




உன்னைப்
பிடித்ததால் தான் -
பிடித்து வந்தேன்;
பிடித்து வந்ததால்தான் -
என் மேல்
பிடித்த மில்லையோ?
பிடித்தபிடி விடாத - என் 
பிடிவாத குணம் - நீ
பிடிபட்ட பிறகும் - உனக்குப்
பிடிபட வில்லையோ?

----
எப்படி பிடி பிடி என்று பிடித்திருக்கிறார்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வரிக்கு வரி பிரமிப்பாக இருக்கிறது. பட்டபிஷேகத்தில் கண்ட ஒரு சில வரிகளுடன் முடித்துக்கொள்கிறேன்.


முன்னம் -
அயோதிக்குள் அரண்மனை;
இன்று -
அரண்மனைக்குள் அயோத்தி!
ஆம்! - அய்யன்
திருவோலக்கத்தில்
திரும்பிய புறமெல்லாம் -
தலைகள்; ஜன -
அலைகள்!

அறமும் கற்பும் - 
அரியணை ஏறின;
 “ஓம்! ஓம்!” என்று - நல்
ஓரை கண்டு -
ஓதக் கடல்கள் கூறின!


இந்தப் பதிவை  முடித்ததும் மறுபடியும் அவதார புருஷனை படிக்க வேண்டும் என்கிற ஆசை எழுந்துவிட்டது.


நன்றி.
ரமாரவி.

------------------------------------------------------------------------------------------------------------------------