திங்கள், டிசம்பர் 12, 2011

மழலை உலகம் மகத்தானது..தொடர் பதிவு.

திருமதி ஏஞ்ஜலின் சுந்தரம், என்னை, ‘மழலை உலகம் மகத்தானது’  தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார்.எனது நன்றியினை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.



மழலைகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு உற்சாகம் வருகிறது.
குழந்தைகளைப்பற்றி நினைக்கும் போதே அந்த கள்ளம் கபடம் இல்லாத பேச்சு,சிரிப்பு நம் மனதை கொள்ளை கொண்டு நாமும் குழந்தையாகிவிடுகிறோம். பதிவுலகில் ஏறத்தாழ எல்லோராலுமே மழலை உலகம் பற்றி பதிவு எழுதப்பட்டு விட்டது. நான் புதியதாக எழுத ஏதுமில்லை.

இருந்தாலும் சுமார் 11 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு ஏற்பட்ட குழந்தையை பற்றிய ஒரு சிறு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



அந்தக்குழந்தைக்கு அப்பொழுது சுமார் 4 வயது இருக்கும்.யு.கே.ஜி படித்துக்கொண்டிருந்தாள்.கிருஸ்துமஸ்க்கு பள்ளியில் விடுமுறை கொடுக்கப்பட்டது. அம்மா,அந்தக்குழந்தையையும் அவளுடையை அக்காவையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றார்கள்.அந்த ஊருக்கு முதன்முறையாக செல்வதால் பெரிய எதிப்பார்ப்புகள்,எந்தெந்த இடங்களை பார்க்க வேண்டும் என்ற பட்டியலுடன் சென்றார்கள்.


ஊருக்கு சென்று அடைந்த முதல் நாள் ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டு அடுத்த நாள் வெளியே செல்ல ஆயுத்தம் செய்தார்கள்.குழந்தையின் தந்தை அந்த ஊரில் வேலைபார்பதால்,அவர் காலையில் அலுவலகம் கிளம்ப ஆயுத்தமானார்.தூங்கி எழுந்த இந்த குழந்தை திடீரென அழ ஆரம்பித்தது. என்னவென்று தெரியாமல் அம்மா அப்பா இருவரும் தவித்துப்போனார்கள்.


குழந்தையின் தந்தை குழந்தையை அருகில் அழைத்து ஜீரம் ஏதாவது இருக்கிறதா என சோதித்துப்பார்த்தார்.ஆனால் ஜீரம் ஏதுமில்லை,குழந்தையும் அழுகையை நிறுத்தவில்லை.கைகால் வலி ஏதாவதா என்று அறிந்துகொள்ள குழந்தையில் கை கால்களை சோதித்து பார்த்தால் அதுவும் இல்லை.ஆனால் குழந்தையின் காதுக்கு அருகில் கையை எடுத்துச்சென்ற போது குழந்தையின் அழுகை அதிகமானது.


உடனே மடியில் அமர்த்திக்கொண்டு காதை பார்த்ததில், காதின் உள்ளே ஏதோ வெண்மையாக தெரிந்தது.சளி பிடித்து இருப்பதால் காதில் ஏதோ வலி என்று நினைத்து மருத்துவரிடம் அழைத்து செல்ல சொல்லிவிட்டு,விடுப்பு எடுக்க முடியாத காரணத்தால்,அப்பா அலுவலகத்திற்கு சற்று சங்கடத்துடனே புறப்பட்டார்.


அம்மாவும் தமது வேலைகளை அவசரத்துடன் முடித்து கொண்டு மருத்துவமனைக்கு செல்ல தயாரானார். ஊருக்கும் புதியவர்,பாஷை வேறு தெரியாது. சற்று பதட்டத்துடன்,தொலைபேசி புத்தகத்தை பார்த்து பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொண்டார்.

அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு மருத்துவ மனையை அடந்தார். குழந்தையின் அழுகை அதிகமானது. காத்திருப்போரின் எண்ணிக்கை வேறு அதிகமாக இருந்தது. செவிலியரிடம் குழந்தையின் வலியைப்பற்றி சொல்லி உடனடியாக மருத்துவரை பார்க்க அனுமதி கேட்டார்.சிறு நேரத்தில் அனுமதி கிடைத்து மருத்துவரின் அறைக்கு சென்று குழந்தை காதைப்பற்றி குறிப்பிட, மருத்துவரும் ஒரு நொடி குழந்தையின் காதை பார்த்து விட்டு, உடனே ஒரு சிறிய கொரடா மாதிரி ஒரு ஆயுதத்தை காதில் விட்டு வெளியில் எடுத்து பார்த்துவிட்டு அம்மாவிடம் சொன்னார்.

“ குழந்தை காதில் பேப்பரைதான் போட்டுக்கொண்டு இருக்கிறாள்,நான் அதனை வெளியே எடுத்து விட்டேன். இனி வலி இருக்காது பயப்பட தேவையில்லை.நீங்க போகலாம்.பீஸ் .ரூ.150/- ”

அந்த பேப்பரையும் அம்மாவிடம் கொடுத்தார்.அம்மா அந்த பேப்பரையும் கை பையில் பத்திரப்படுத்திக் கொண்டுவிட்டு மருத்துவருக்கு பணம் கொடுத்துவிட்டு வந்தார்.

குழந்தையின் அழுகை சற்று நேரத்தில் நின்று,மீண்டும் அது முன் போல சிரித்து விளையாட ஆரம்பித்தது.மனம் நிம்மதியான அம்மா அப்பாவிற்கும் தகவல் தெரிவித்தார்.





சாயங்காலம் அப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அம்மா மருத்துவ மனைக்கு சென்று வந்ததை விவரமாக தெரிவித்தார்.அப்பொழுத்துதான் மருத்துவர் கொடுத்த குழந்தையின் காதிலிருந்து எடுக்கப்பட்ட பேப்பர் நினைவுக்கு வர அதை எடுத்து பார்த்தார்.பார்த்தவுடன் அவருக்கு ஆச்சிரியமாக இருந்தது.

அம்மா அந்த காகிதத்தை அப்பவிடம் காண்பித்து “அதெப்படி பேப்பரை இவ்வளவு சின்னதாக மடிக்க முடியும்? பாருங்கள் எவ்வளவு சின்னதாக மடிக்கப்பட்டு இருக்கு?” என்று வியப்பாக கூறினார்.காகிதம் மடிக்கப்பட்டிருப்பதை பார்த்த அப்பாவிற்கும் ஆச்சர்யமாக இருந்தது.உடனே அவர் குழந்தையை கூப்பிட்டர்.




(குழந்தைக்கும் அப்பாவிற்கும் நடந்த சிறு உரையாடல்)

 “இவ்வளோ சின்னதா நீயா காகிதத்தை மடிச்ச? ”

  “ஆமாப்பா”

 “எப்படி இவ்வளவு சின்னதா மடிச்ச?’

 “ரொம்ப ஈஸிப்பா,கொடு நான் மடிச்சு காட்டரேன்”

 குழந்தை மடிப்பதை ஆச்சரியாமாக பார்த்தார்கள்.

 அப்பா: “உன்னால மட்டும்தான் இப்படி முடியும்ன்னு நினைக்கிறேன்.ஆச்சரியமா இருக்கு”

குழந்தை: “என் பிரேண்டும் மடிச்சாப்பா”

 “அப்படியா? எப்ப மடிச்சீங்க?”

 “ 22nd   அன்னைக்கு கிருஸ்மஸ் செலிபிரேஷன்ஸ் இருந்துது இல்லையா?அன்னைக்குதான் மடிச்சோம்?

 “சரி மடிச்சு ஏன் காதுல போட்டுண்ட?”

 “நான் போட்டுக்கலை, என் பிரேண்ட்,  ராக சுவேதா தான் போட்டா,

  நான் மடிச்சு அவ காதுல போட்டேன். அவ மடிச்சு என் காதுல போட்டா”





அப்பொழுது பயந்தாலும்,இன்று அந்தக்குடும்பம் அந்த நிகழ்ச்சியை நினைத்து பார்த்து சிரிக்காத நாட்களே இல்லை.அந்த மாதிரியான மழலை செயல்கள்....அவர்களது உலகமே மகத்தானதுதான்.







 
---------------------------------------------------------------------------------------------------------------------







செவ்வாய், டிசம்பர் 06, 2011

கோவில் தரிசனம்--பையூர் கரிய மாணிக்கம் பெருமாள்.

பையூர்--இது ஆரணிக்கருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். என் அப்பாவின் சொந்த ஊர். மூன்று தலைமுறைக்கு முன்னதாகவே சென்னைக்கு வந்து விட்டதால் அந்த ஊரின் தொடர்பு இல்லாமல் இருந்தது.

அந்த ஊரை சேர்ந்தவர்கள் வேலை விஷயமாக சென்னை மற்றும் வேறு ஊர்களில் குடியேறிவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து கோவிலை புதுப்பிக்கிறார்கள் என்று கேள்வி பட்டவுடன் என் அப்பா,தம்பி மற்றும் குடும்பத்தினர்கள் அவ்வேலையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோவில் பணிகளை சீரிய முறையில் முடிக்க உதவினார்கள். கடந்த 3/4 வருடங்களுக்கு முன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது
.

டிசம்பர் 3 ம் தேதி என் தம்பி அக்கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். அன்று காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி காஞ்சிபுரம்,செய்யாறு வழியாக சுமார் 11 மணிக்கு பையூர் கோவிலை அடந்தோம். மழையின் காரணமாக சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது.



முன்னரே தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டிருந்ததால் முகுந்தன் பட்டர் கோவிலில் இருந்தார்.சாதாரணமாக காலை ஒருமுறை,மாலை ஒருமுறை கோவில் திறக்கப்பட்டு,பூஜைகள் முடித்து திரும்பவும் கோவிலை மூடி விடுகிறார்கள். நாம் வரும் தகவல் தெரிவித்திருந்ததால் கோவிலை திறந்து வைத்திருந்தார்கள்.

அழகிய கோவில். உள் பிராகாரம்,வெளி பிராகாரம் உண்டு.  வெளி பிராகாரத்தில் வேலைகள் இன்னும் முடியவில்லை.

பெருமாள் கரிய மாணிக்கம்,தாயார்மரகதவல்லி. உற்சவ தாயாருக்கு, வேதவல்லி என்கிற திரு நாமம்.

கரிய மாணிக்க பெருமாள்.


மரகதவல்லி தாயருக்கும் ஆண்டாளுக்கும் சிறியதாக தனி சன்னிதிகள். மற்றும் ஆஞ்சனேயருக்கு உள் பிராகாரத்தில் தனி சன்னிதி.

மரகதவல்லி தாயார்.

ஆண்டாள்.


ஆஞ்சனேயர்.

புஜைகள் சிறப்பாக நடைபெற்று நாங்கள் வாங்கிச் சென்றிருந்த வஸ்திரங்கள், மாலைகள் ஆகியவற்றால் பெருமாள் அலங்கரிக்கப்பட்டார். தரிசனம் சிறப்பாக அமைந்தது.

                                               ஆழ்வார்,ஆச்சாரியர்கள்.





என் அப்பாவின் தாத்தா தனது வயலில் பயிர் வைப்பதற்காக உழுகையில் ஒரு அம்மன் சிலை கிடைத்தாம்.அதனால் அந்தப்பகுதியில் அம்மனுக்கு கோவில் கட்டி சிறிதளவு நிலத்தை கோவிலுக்காக வழங்கினாராம்.அக்கோவில், பொன்னி அம்மன் கோவில் என வழங்கப்பட்டு,பூஜைகள் சிறப்பாக நடை பெற்று வருகிறது.இது சுமார் 120 வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது என்பதால் விவரங்கள் தெரியவில்லை. அப்பாவிற்கும் தற்போது மறந்து விட்டதால் தகவல் அதிகம் கிடைக்கவில்லை. அந்த அம்மன் கோவில் எங்களது மூதாதயர்களின் நிலத்தில் இருப்பது மாத்திரம் தெரிகிறது.


பொன்னியம்மன்.





பொன்னியம்மன் கோவில்

  பொன்னியம்மன் கோவில் உழு நிலத்திற்கு அருகில் இருப்பதை காணலாம்.

3ம் தேதி எதற்காக சென்றோம் என்று சொல்ல வேண்டாமா? அப்பாவிற்கு 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பித்தது.அதற்காகத்தான் சிறப்பு புஜை,சொந்த ஊரில்.



           
-------------------------------------------------------------------------------------------------------------------

சனி, நவம்பர் 26, 2011

ஐஸ்வரியா ராயும் ஆயிரம் ரூபாய் தங்கமும்.....

நவம்பர் 14 ம் தேதி, என் வீட்டு வேலை செய்யும் ரத்னா,வேலைக்கு வரும்போதே மிக பரபரப்புடன் வந்தார்.அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:-


 “அம்மா டி.வி. போடுங்க ஐஸ்வரியாராய்க்கு குழந்தை பிறந்திடுச்சா பார்த்து சொல்லுங்க”.

 “எதுக்கு ரத்னா”? என்ன குழந்தை அப்படீன்னு தெரிஞ்சுக்கணுமா”?

  “ஆமாம் மா,அவங்களுக்கு பெண் குழந்தை பிறந்துதுனாக்க தங்க ஒரு கிராம் 1000 ருபாய்க்கு கொடுக்கறாங்களாம், வட்டிக்காரர் கிட்ட கேட்டு பணம் வாங்கிக்கணும் இல்லைன்னா, வீட்டுல இருக்க எல்லாத்தையும் கொண்டு வச்சாவது கடன் வாங்கி நந்தினிக்கு (அவரின் 13 வயது பெண்) ஒரு 15/20 கிராம் வாங்கிவிட வேண்டும்”

“என்ன ரத்னா? நீ என்ன சொல்லற? தங்கம் விக்கற விலையில அது யாரு அது 1000 க்கு கொடுப்பது”?

 “எங்க வீட்டு கிட்ட பேசிக்கிட்டாங்கம்மா.எல்லோரும் வாங்கப் போறாங்களாம்”

 “அதெல்லாம் இருக்காது ரத்னா யாராவது கதை கட்டி விட்டிருப்பாங்க.தங்கம் விக்கற விலையில அவ்வளவு குறைச்சலாக யாரும் கொடுக்க மாட்டாங்க”


 “இல்லம்மா!!  நீங்க வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களா அதனால உங்களுக்கு ஒண்ணும் தெரியலை. !!!!!!!!!!!!!!!!.  நிஜம்மா கொடுக்கறாங்களாம், நீங்களும் அண்ணங்கிட்ட சொல்லி ஏதாவது வாங்கிக்கோங்க ”.


  “ரத்னா நீ பாட்டுக்கு வட்டிக்கு கடன் எல்லாம் வாங்காத,எனக்கென்னமோ இது புரளின்னுதான் தெரியறது. எவனாவது வட்டிக்கடைக்காரன் உங்களை எல்லாம் ஏமாத்த கிளப்பி விட்டிருப்பான்.நீங்களும் வட்டிக்கு பணத்த வாங்கி, தங்கமும் வாங்காம பணத்தையும் செலவழிச்சு நஷ்டப்பட வேண்டிதான். அதனால நான் சொல்லறதை கேளு.2 நாள் பொறு, அவங்களுக்கு குழந்தை பிறக்கட்டும், அப்ப என்ன ஆகிறதுன்னு பார்க்கலாம்”

  “சரிம்மா” என்று சொன்னாலும்,

 இவங்களுக்கு ஒண்ணுமே தெரியலையே, இவங்க படிச்சவங்க இல்லை போல இருக்கு என்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.





அவர் மறுநாள் வேலைக்கு வரவில்லை.அதற்கு அடுத்த நாள் வருவதற்குள் எனக்கு மண்டை வெடித்து விட்டது. என்னாச்சோ என்னமோ? ஐஸுக்கு இன்னும் குழந்தை பிறந்த தகவல் வேறு வரவில்லையே, ரத்னா கடன் வாங்கி விட்டாரா? ஏமாந்து போய்விட போகிறார் என்று ஏதேதோ எண்ணங்கள்..

16ம் தேதி காலையில் வந்தார்,வந்தவுடன் நான் உடனே கேட்டேன்

 “கடன் ஏதாவது வாங்கிவிட்டையா ரத்னா? என்னாச்சு தங்கம் கொடுக்கிறார்களா? குழந்தை பிறந்து விட்டதா?"

  "இன்னும் இல்லம்மா. கடன் இப்ப வாங்க வேண்டம் அப்படீன்னு எங்க அத்தை(மாமியார்) சொல்லிருச்சு”

  “ரத்னா மாமியார் சொன்னத கேளு.யாரும் இப்ப தங்கம் விக்கற விலையில ஒரு கிராம் 1000 த்துக்கு கொடுக்க மாட்டாங்க”

  “சரிம்மா, பார்க்கலாம்” என்று நான் சொன்னதை கேட்டு பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டு சென்றார்..


 நான் அறிவுறுத்திவிட்டேன், புரியவில்லையா இல்லை நான் சொல்லுவது  பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.சரி போகட்டும் எல்லாம் அவள் தலை எழுத்து என்று நான் பேசாமல் இருந்து விட்டேன்.


அன்று சாயந்திரம் ஐஸுக்கு பெண் குழந்தை பிறந்த விவரம் தெரியவந்த உடன், எனக்கு ரத்னா நினைவுக்கு வந்தார். பெண் குழந்தை பிறந்தால்தான் தங்கம் விலை கம்மி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் ஒன்றும் கிடையாது என்று ரத்னா சொன்னாளே! ஆண் குழந்தையாவது பிறந்திருக்கக் கூடாதோ? எத்தனை பேர்கள் ஏமந்தார்களோ? பாவம்! என்று மறுபடியும் எனக்கு ஏதேதோ  எண்ணங்கள்!!!





மறுநாள் காலை ரத்னா வந்தவுடன் அவரே, “அம்மா நீங்க அன்னைக்கே சொன்னீங்களா? நானும் யோசிச்சேன்.எங்க அத்தை வேற சொல்லிச்சா? அதனால் பெரியவங்களா சொல்லறாங்களே அப்படீன்னு நல்ல வேளை நான் கடன் வாங்கலை.யாரும் அப்படி தங்கம் எல்லாம் கொடுக்கலை.எங்க வீடுங்க இருக்கற பக்கம் யாரோ ஏமாத்தி இருக்காங்க.அப்படி எங்க வீட்டாண்ட இரண்டு பேர் வட்டிக்கு வாங்கிட்டாங்க. சரி தங்கம் கிடைக்கலன்னு பணத்த அப்படியே அன்னைக்கே திருப்பி கொடுக்கலாம்ன்னு போனா,வட்டிக்கடைகாரர் பிடித்த வட்டியை திருப்பி கொடுக்க மாட்டேன்,அடுத்த மாத வட்டியும் கொடு அப்படி இப்படின்னு ஒரே தகராறு பண்ணியிருக்காங்க! அப்பறமா எப்படியோ ஒரு மாத வட்டியோட விட்டாரு.பாவம் அவங்க ஒரு நாள் கூட பணத்தை வச்சுக்கல அதுக்குள்ள 350/400 நஷ்டம் ஆயிருச்சு.”


  “நல்ல வேளை ரத்னா ஏதோ நீயாவது என்பேச்சையும், உன் மாமியார் பேச்சையும் கேட்டியே? பாவம் நஷ்டப்பட்டவங்க, இனிமேலாவது இதையெல்லாம் நம்பாதே! பாரு உங்க மாமியாருக்கு எல்லாம் தெரிந்திருக்கு.”என்றேன்.


  “அதெல்லாம் இல்லைம்மா! அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது, மூணு வருஷத்துக்கு முன்ன ஏதோ கொஞ்சம் பணம் கட்டினாக்க 6 மாசத்தில பாத்திரம் கிரண்டர்,மிக்ஸி எல்லாம் தரேன்னு சொன்னங்களா,அதை நம்பி நான் 4000மும் அவங்க 3000 மும் கட்டி ஏமாந்து போயிடோம் அதுலேர்ந்து அவுங்க பணவிஷயத்துல ஜாக்கிரதையா இருக்காங்க.”.(அந்த அமர்க்களத்தையெல்லாம் அப்பறமா ஒரு நாள் உங்களுக்கு சொல்லறேம்மா இப்ப நேரம் இல்ல என்று சொல்லியிருக்கிறார்.)


  “பாரு ரத்னா,உங்க மாமியார் ஒரு தடவை பட்டவுடன் எவ்வளவு நன்றாக புரிந்து கொண்டு விட்டாங்க! நீயாவது ஏதோ கொஞ்சம் படிச்சவ (7வது வரைக்கும் படித்திருக்கிறாராம்.) உங்க மாமியாரப்பாரு படிக்கலைனாலும் விவரமா இருக்காங்க அவங்கள பார்த்து தெரிஞ்சுக்கோ” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.



இப்படி ஏமாறும் எத்தனையோ பேர்களில் இந்த ஒரு தடவை ஒரு ரத்னா காப்பாற்றப்பட்டார். அவர் சொன்னதிலிருந்து அவர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிரார்கள் என்று தெரிகிறது.நமக்கு தெரியாமல் எத்தனைபேரோ?  இந்த முறை அவரை சற்று யோசிக்கவைத்து உடனடியாக கடன் வாங்காமல் தடுக்க முடிந்தது. மேலும் படிப்பறிவே இல்லாத அவரின் மாமியார் அனுபவத்தால் திருந்தி ஜாக்கிரதையாக இருக்கிறார்.ஆனால் ரத்னா இன்னும் திருந்தினாரா தெரியவில்லையே?  இனிமேலாவது ஏமாறாவது இருப்பாரா? இந்தமுறை ஏதோ எங்கள் பேச்சை கேட்டு பேசாமல் இருந்தார்!!யாரும் ஏதுவும் சொல்லவில்லை என்றால் கட்டாயம் கடன் வாங்கி இருப்பார்.மற்றவர் அனுபவத்திலிருந்து தாம் பாடம் கற்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வருமா? இவர்களுக்கெல்லாம் யார்? எப்படி? விழிப்புணர்வை ஏற்படுத்துவது?


ஒன்று மட்டும் தெரிகிறது -- விழிப்புணர்வு என்பது படிப்பதினால் வருவதில்லை, புரிந்து கொள்வதினால் வருகிறது.






வியாழன், நவம்பர் 24, 2011

சுந்தர காண்டம்--4.


இராவணனின் மிரட்டலுக்கு பயந்த சீதையை திரிஜடையின் கனவு விஷயம் சற்று தேற்றியது. இருந்தும் சீதை தன்னுடைய நிலைமையை நினைத்து மீண்டும் துக்கித்தாள்,என்பது வரை சென்ற பகுதியில் பார்த்தோம்.இனி..........




ஸர்க்கம்--28.  சீதை உயிரைவிட யத்தனித்தது.

சீதை ராவணனுடைய குரூரமான வார்த்தைகளை கேட்டு மிகவும் மன வேதனை அடைகிறார். “ஐயோ! நான் கொஞ்சம் கூட புண்ணியம் செய்யவில்லையே,இவர்களால் இப்படி மிரட்டப்பட்டும் என் உயிர் இன்னும் போகவில்லையே, ஹா.ராமா..சகல பிராணிகளுக்கும் சந்தோஷத்தை அளிக்க வல்லவரே! என்னுடைய துக்கம் உமக்கு தெரியவில்லையா?” என்று அழுது புலம்புகிறாள்.


மேலும் இனி இந்த உயிரை வைத்துக்கொண்டு ஒரு புண்ணியமும் இல்லை என நினைத்து எப்படியாவது உயிரை விட்டுவிடவேண்டும் என முடிவு செய்கிறாள், எப்படி உயிரை விடுவது என யோசிக்கிறார், “விஷத்தை குடித்தாவது,ஆயுதங்களாலாவது உயிரை போக்கிக்கொள்ளலாம்,ஆனால் அவற்றை கொண்டு வந்து கொடுப்பவர் இங்கில்லையே ! எனக்கு இந்த உபகாரம் செய்ய இங்கு யாருமில்லை.எனவே என்னுடைய பின்னலை இந்த மரத்தில் கட்டி அதில் தூக்கு போட்டுக்கொள்ளப்போகிறேன்” என முடிவு செய்கிறாள்.





ஸ்ர்க்கம்--29.  சுபசகுனங்கள்.

இப்படியாக சீதை தனது உயிரைவிட யத்தனித்த போது, பல சுப சகுனங்கள் தோன்றியது. அவை சீதையை இனி துக்கப்பட வேண்டாம் என்று சொல்லுவது போல இருந்ததாம்.இதனால் சற்று மனம் தெளிந்த சீதை சந்தோஷித்தாள்.அப்பொழுது அவள் முகம் சுக்லபக்‌ஷத்தில் சந்திரனால் வரவரக் காந்தி பெற்ற இரவு போல விளங்கியதாம்.






ஸர்க்கம்--30.   அனுமன் சீதையிடம் பேச நிச்சயித்தது.

பராக்கிரம சாலியான அனுமன் ராகஷஷிகளின் பேச்சுக்களையும் திரிஜடையின் ஸ்வப்பனத்தை கேட்டுக்கொண்டிருந்து விட்டு,சீதையிடன் எப்படிப்பேசுவது என்று ஆலோசிக்கிறார். “வானரனான நான் மனுஷ்ய வார்த்தையில் பேசலாமா?அல்லது,வியாகரணலக்‌ஷணங்கள் பொருந்திய சமஸ்கிருத பாஷையில் பேசலாமா?"என்று யோசித்து, மனுஷ பாஷையிலேயே பேசலாம் அதுவும் கோஸஸ நாட்டிலுள்ளவர்கள் பேசும் பாஷயிலேயே பேசுவது நலம், என முடிவு செய்கிறார். பிறகு என்ன பேசுவது என ஆராய்ந்து,ஸ்ரீ ராமச்ந்திரனுடைய சரித்திரத்தை வர்ணிக்கலாம் அதனால் சீதைக்கு தன்னிடம் நம்பிக்கை பிறக்கும் என நிச்சயித்துக்கொள்கிறார்.


ஸர்க்கம்--31.  மாருதி ராம சரித்திரத்தை வர்ணித்தது.






இப்படி தான் எப்படி என்ன பேசுவது,எப்படி பேசுவது என முடிவு செய்து கொண்ட அனுமன்,மரத்தின் தாழ்வான கிளைக்கு வந்த அமர்ந்து கொண்டு ஸ்ரீராம் மூர்த்தியை பற்றி சொல்ல ஆரம்பித்து, தசரதருக்கு ராமர் பிறந்தது, வளர்ந்தது, வில்வித்தை கற்றது, சீதையை திருமணம் செய்து கொண்டது,பிறகு தசரதரின் வரத்தை காப்பாற்ற சீதையுடனும்,தம்பி லக்‌ஷ்மணனுடனும் காட்டிற்கு வந்தது,சீதை காணாமல் போனது எல்லாவற்றையும் கூறுகிறார்.

ராம கதையை கூறிய பிறகு தான் யார் என்பதையும் இலங்கைக்கு சீதையை தேடிவந்ததையும் , சுக்கீரவனுடைய மந்திரி என்பதையும் சீதைக்கு தெரிவிக்கும் விதமாக ராக்‌ஷஷிகளுக்கு தெரியாமல் சீதைக்கு மட்டும் கேட்குமாறு மெல்லிய குரலில் இணக்கமாக எடுத்துரைக்கிறார்.



ஸ்ர்க்கம் --32.  சீதையின் சந்தேகம்.






அனுமானின் வார்த்தைகளை கேட்ட சீதை ராமனால் அனுப்பப்பட்ட தூதன் வந்திருக்கிறான் என்று சந்தோஷம் கொள்கிறாள். மரத்தின் மேல் பார்க்கும் பொழுது வெண்மையான வஸ்திரம் உடுத்தியிருக்கும் அனுமானைப் பார்க்கிறாள். ஆனால் இதெல்லாம் மாயையாக இருக்குமோ என்று நினைத்து மறுபடியும் துக்கம் கொள்கிறாள். இப்படி மாறி மாறி நிஜமா?ஸ்வப்ப்னமா ?என்று தெரியாததாக இருக்கிறதே எனக் கவலைகொண்டாள்.


ஸ்ர்க்கம் --33. சீதை பதில் சொன்னது.




அனுமன் சீதையின் சமீபத்தில் வந்து அவரிடம், தாயே தங்களின் நிலையையும் துக்கத்தினையும் பார்க்கும் பொழுது தாங்களே சீதை என நினைக்கிறேன் என்கிறார். அதற்கு சீதை பூமியில் ராஜசிரேஷ்டர்களுக்குத் தலைவரும்,தசரத சக்ரவர்த்திக்கு நாட்டுப்பெண்ணும், ராகவனுடைய பார்யையும் தாந்தான் என்று கூறுகிறாள். கைகேயிக்கு கொடுத்த வரத்தின் பொருட்டு தசரதரால் ராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டதும், தானும் லக்‌ஷ்மணனும் அவரை பின்தொடர்ந்ததையும் கூறுகிறாள்.

பிறகு அனுமனிடம் ராமர் எங்கிருக்கிறார்? எப்படியிருக்கிறார் என வினவினாள்.


ஸ்ர்க்கம்--34.  மாருதி ராமனுடைய வரலாற்றை சொன்னது.

சீதை ராமனைப்பற்றி கேட்டதும் அனுமான் ஸ்ரீராகவன் ஷேமமாக இருக்கிறார். தம்பி லக்‌ஷ்மணனும் நன்றாக இருக்கிறார் என் அவர்களுடைய ஷேமங்களைப்பற்றி கூறுகிறார்.




அனுமன் பதில் சொன்னதை கேட்டும் சீதைக்கு இது சொப்பனமா ?அல்லது ராவணனுடைய மாயையா? என்று தெரியவில்லை. அதனால் அவள், அனுமனிடத்தில் பேச மிகவும் பயந்தாள். அவளுடைய மனநிலையை புரிந்து கொண்ட அனுமன், ராமருடைய கல்யாண குணங்களை விவரித்து, “நான் ராவணன் அல்ல ராமதூதந்தான் என்மீது நம்பிக்கை வையுங்கள்” என மதுரமான வார்த்தைகளால் சீதைக்கு எடுத்துரைகிரார்.



ஸ்ர்க்கம்--35. மாருதி ராம்னுடைய வரலாற்றை சொன்னது (தொடர்ச்சி)

அனுமன் இப்படி சொன்னதும் சீதை ராமலக்‌ஷ்மணர்களுக்கும் உனக்கும் எப்படி சம்பந்தம் ஏற்பட்டது? ராமலக்‌ஷ்மணர்களின் அடையாளங்களை விவரமாக கூறு அப்பொழுத்துதான் எனக்கு உன்னிடம் நம்பிக்கை வருமென்கிறாள்.



சீதை இப்படி சொன்னதும் அனுமன் சந்தோஷமாக ராமரின் அங்க அடையளங்களையும், குணநலன்களையும் வானரர்களுக்கும் ராமருக்கும் ஏற்பட்ட சம்பந்தத்தை விவரமாக சீதைக்கு எடுத்துரைக்கிறார். அதுமட்டுமில்லாது, அனுமன் தன்னுடைய தாய் தந்தை பற்றியும் தான் வாயு பகவானுடைய புத்திரன் என்கிற விவரங்களையும் சீதைக்கு சொல்லுகிறார்.





ஸர்க்கம் --36. அனுமன் கணையாழியைக் கொடுத்தது.

அனுமன் இப்படி ராமலக்‌ஷ்மணர்களைப்பற்றி சொல்லிவிட்டு ராமர், சீதைக்கு நம்பிக்கை உண்டாகும் பொருட்டு தன்னிடம் கொடுத்து வைத்த அவருடைய கணையாழியை(மோதிரம்) சீதையிடம் கொடுக்கிறார்.




சீதை அந்த கணையழியை பார்ர்த்தது ராமரையே பார்த்தது போல சந்தோஷிக்கிறாள். மறுபடியும் அனுமனிடம் ராமரை பற்றி கூறும்படி கேட்கிறாள். ராமர் சீதையை பிரிந்து வாடி எப்பொழுதுமே அவள் நினைவுடனே இருக்கும் விவரங்களை அனுமான் தெரிவிக்கிறார்.அந்த விவரங்களை கேட்டதும் சீதைக்கு கவலையும் துக்கமும் மாறி மாறி உண்டயிற்று..