புதன், அக்டோபர் 31, 2012

சுற்றுலா.....குளு குளு கூர்க்..


 குளுமையான கூர்க்கிற்கு சுற்றுலா என்பதனால் உடனடியாக கிளம்பிவிட்டோம். ( ஆனால் பல அலுவல்களுக்கு நடுவில் செல்ல வேண்டி இருந்ததால் இரு தினங்கள் மட்டுமே பயணம். ஆனால் மறக்க முடியாத பயணம்.)

கூர்க்...





உயர்ந்து பனிபடர்ந்து நிற்கும் இமைய மலைத் தொடரைப் பார்த்தால்,அதன் கம்பீரமான அழகு மனதை கொள்ளை கொள்ளும்.

ஆனால், எங்கு திரும்பினாலும் பசுமையை போர்த்திக்கொண்டு இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமை கண்ணையும்,மனதையும் அதிகம் கவர்ந்து விடுகிறது.


முதல் நாள் மைசூருக்கு சென்று அரண்மனை, கே.ஆர்.எஸ். அணை எல்லாம் பார்த்து விட்டு  மைசூரிலேயே தங்கி விட்டோம். ஏற்கனவே மைசூர் சுற்றுலா பற்றி எழுதி விட்டதால் இங்கு கூர்க மட்டும்  பார்க்கலாம்...((- மைசூர் சுற்றுலா.))


மறு நாள் காலை 7 மணிக்கு கூர்க்கிற்கு கிளம்பினோம். கூர்க் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் உள்ளடக்கிய ஒர் மாவட்டம்.இதன் தலைநகர் மெர்காரா எனப்படும் மடிக்கேரி ஆகும்.ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் மெர்காரா. கர்நாடகத்தில் இதற்கு பெயர் மடிக்கேரி.




11ம் நூற்றாண்டு வரை குடகின் வட பகுதி, கடம்பர்களாலும், தென் பகுதி கங்கர்களாலும் ஆளப்பட்டு வந்தது. 11ம் நூற்றாண்டில் இது சோழர்களின் வசம் வந்தது, அதற்கு பிறகு ஹொயிசாலர்கள், விஜயநகரத்து அரசர்கள்,  பிறகு சுமார் 200 வருடங்கள் ஹலெரி வம்சத்தினரால் ஆளப்பட்டு 17ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் வசம் வந்தது. பிறகு 1834ல் ஆங்கிலேயரிடம் வந்து குடகு கூர்க் எனவும், மடிகேரி மெர்காரா எனவும் ஆகியது.



சுமார் 3500 அடி உயரத்தில்.


 மைசூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது. மெர்காரா வரையில் சாலை நல்ல பராமரிப்பில் இருந்தது மிகச்சீக்கிரத்தில் மெர்காரவை அடைய முடிந்தது. வழியில் நிறைய கிராமங்களும், பிலிகேரி, ஹன்சூரு மற்றும் குஷால்நகர் ஆகிய பெரிய ஊர்களும் இருக்கிறது. இதில் குஷால் நகர் சற்று பெரியதும் பரபரப்பு மிகுந்த ஊராகவும் இருக்கிறது. இதற்கு அருகில் உள்ள பைலகுப்பே (Bylakuppe) என்கிற இடம் இந்தியாவில் திபத்தியர்கள் இரண்டாவதாக அதிகமாக குடியேறிய இடமும், அவர்களது தங்க புத்தர் கோவில் உள்ள இடமும் ஆகும்.









மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம் ஆகிய இடங்களை மாதிரியே இப்பகுதிகளின் வளர்ச்சியில் திப்பு சுல்தானின் பங்கு பெருமிகிதத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.


இப்படி பல ஊர்களை கடந்து மெர்க்காரவை அடைந்தோம். மலை ஏறுவதே தெரியாமல் சற்றென்று மலைப்பகுதியை அடைந்து விட்டால் போல இருந்தது சாலை. மெர்காரா வருவதற்கு சற்று முன்னதாகவே காபி தோட்டங்களை பார்க்க முடிந்தது. மலைப்பதையை நெருங்க ஆரம்பித்ததும், எங்கு திரும்பினாலும் காபி தோட்டம்தான்.  சாலையின் இரு பக்கங்களிலும் மிக அழகாக பரமரிக்கபடும் மிகப்பெரிய அளவிலான காப்பி தோட்டங்களையும் அதன் நடுவே  பெரிய ஓட்டு வீடுகளும் காண முடிந்தது.

காபி தோட்டம்.




காபி தோட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றால் மெர்க்காரா வந்து விடுகிறது. மலைச்சரிவுகளில் வீடுகள் கடைத்தெருக்கள் என மிக அழகான ஊர்.


 அடுத்த பதிவில்...தலைக்காவேரி..


.

வெள்ளி, அக்டோபர் 19, 2012

கோவில் தரிசனம்...........நலம் தரும் நாகமங்கலா.

நலம் தரும் நாக மங்கலா..........







நாகமங்கலா பெங்களூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் மாண்டியா மாவட்டத்தில் இருக்கிறது. இங்குள்ள செளமிய கேசவ பெருமாள் கோவில் நாக தோஷம் மற்றும் ஸர்ப்ப தோஷங்கள் நிவர்த்தி செய்ய விசேஷமாக கருதப்படுகிறது.





செளமிய கேசவ பெருமாள்.



மூலவர் செளமிய கேசவ பெருமாள் 4 கரங்களுடன், ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்களுடன் காட்சியளிக்கிறார். மேல் கைகளில் சங்கு வலது பக்கத்திலும் சக்கரம் இடது பக்கத்திலும்,கீழ் கைகளில் வலது பக்கத்தில் தாமரை புஷ்பமும்,இடது பக்கத்தில் கதையுடனும் காட்சித் தருகிறார்.  பல நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் ஹொய்சால மன்னனுக்குட்பட்ட பாளைக்காரர் ஜெய தேவன் என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோவில்,விஜயநகரம் மற்றும் ஹொயிசாலா ஆகிய இரு ராஜ்யங்களின் கட்டிட கலையையும் பிரதி பலிப்பதாக இருக்கிறது.







இக்கோவிலுக்கு பல விசேஷங்கள் சொல்லப்படுகிறது.....


நாக மண்டலம் என்பது ஆதிசேஷனை குறிக்கிறது. எனவே இக் கோவிலுக்கு வருவதால் நாக,ஸர்ப தோஷங்களை மட்டுமல்லாது நம் பாவங்களையும் பெருமாள் நீக்கி விடுகிறார் என்று சொல்லும் விதமாக இந்த இடம் ஆனந்த ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.



இக்கோவிலின் நடுவில் அமைந்துள்ள புவனேஸ்வரி மண்டபத்தின் மேல் கூரையில் காணப்படும் வேலைப்பாடு மிகச்சிறப்பு வாய்ந்தது. கூரையை நாம் ஒருபுரத்திலிருந்து பார்க்கும் போது ஆதிசேஷன் பெரிய சங்கை சுற்றி வளைத்தார் போல தெரிகிறார், மற்றொரு பக்கம் பார்த்தால் ஆதிசேஷன் தலைகீழாக உள்ள தாமைரை மொட்டை சுற்றி வளைத்து காணப்படுகிறர்.











இக்கோவிலில் அஷ்ட லக்‌ஷ்மிகளும் அருள்புரிகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.



 இக்கோவிலில் பல முக்கிய சன்னதிகள் உள்ளன.
முதலில் வேணுகோபாலன் ருக்மிணி,சத்யபாமாவுடன் ஒரு சன்னதியில் காட்சி கொடுக்கிறார்.




அடுத்து லக்‌ஷ்மி நரசிம்மர் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.




தாயார் செளமிய நாயகியும் ஆண்டாளும் தனி சன்னதிகளில் காட்சியளிக்கிறார்கள்.



தாயார் செளமிய நாயகி

ஆண்டாள்.

  ----------------------------------------------------------------------------------------------------------------------------


கடைசி இரு படங்கள் தவிர மற்றவை நாங்கள் சென்ற போது எடுக்கப்பட்டவை.



அடுத்து குளு குளு கூர்க் பயணம்....


நட்புடன்
ரமாரவி.









செவ்வாய், அக்டோபர் 09, 2012

கோவில் தரிசனம். ...... கல்யாண கருடர்..

வணக்கம்.

மறுபடியும் பதிவு எழுத ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஆன்மீகப்பதிவுடன் எழுத ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. கோடை விடுமுறையின் போது ஒரிரு  கோவில்களுக்கு சென்று வந்தோம். அவற்றில் முக்கியமானதும், புராதமானதுமான பிண்டிங்கநவிலே கோவில் பற்றி தெரிந்து கொள்ளலாம்....







பிண்டிங்கநவிலே......(BINDINGNAVILE)

பெங்களூரிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் ஹாசன்,பேலூர் சேல்லும் வழியில் பேலூர் கிராஸ் என்கிற இடத்திலிருந்து சற்று உள்ளே இருக்கிறது பிண்டிங்நவிலே என்கிற இந்த ஊர். இங்கு மிகவும் பழமையான கேசவ பெருமாள் கோவில் இருக்கிறது.  முக்கிய தெய்வம் கேசவ பெருமாளாக இருந்த போதிலும், இங்குள்ள கருடன் சன்னதி சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. காரணம்.......இங்கு கருடருக்கு அவருடை இரண்டு தேவியருடன், திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.






                                                  சந்தன மரத்திலான கருடர்.


 5 அடிக்கும் மேலே உயரமான இந்த கருடர் சந்தன மரத்தால் ஆன திருஉருவமாக இருக்கிறார். கருடர் இங்கு வந்த விவரத்தை கோவில் பட்டர் ஓரு சிறு கதையாக விளக்கினார்.





                                                மூலவர் சென்ன கேசவப்பெருமாள்..





                                                       தாயார் சொளமியநாயகி.



சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன். பேலூரில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு ஒரு கருட விக்கிரகம் தேவைபட அதற்காக காஞ்சீபுரத்திலிருந்து மரத்தால் செய்யப்பட்ட  கருடனை ஏளபண்ணிக்கொண்டு வந்தனராம். அந்த நாட்களில் காடுகளின் வழியாக இரவு பயணப்படுவது சிரமம் என்பதினால் பகல் பொழுதுகளில் பிரயாணம் செய்துவிட்டு இரவுப்பொழுதுகளில் சத்திரங்களிலேயோ, கோவில்களிலேயோ தங்கி பிறகு செல்வது வழக்கம். அப்படி பேலூர் செல்லும் வழியில் பிண்டிங்கநவிலே என்கிற இந்த ஊரை அடைந்த பொழுது இரவுப்பொழுதாகிவிட்டதால் கோவிலில் தங்கியிருக்கிறார்கள்.


காலையில் எழுந்து பேலுருக்கு செல்ல ஆயத்தமான பொழுது, கருடரை தூக்க முடியவில்லையாம். எவ்வளவு முயற்சி செய்தும் கருடரை தூக்க முடியாததால் ஏதோ தெய்வக்குற்றம் ஆகிவிட்டது என்று கலங்கி நின்றார்களாம். மைசூர் ராஜ்யத்திற்கு உட்பட்ட அந்த பகுதியின் பாளைக்காரரான ஜெயதேவர் என்பவர் அங்கு வர அவரிடம் முறையிட....



அவரும், தமக்கு கனவில் பெருமாள் வந்து கருடனை இந்த கோவிலிலேயே பிரதிஷ்டை செய்யும் படி கூறியதாகவும், அதற்காகத்தான் தான் அங்கு வந்ததாகவும், மேலும் தாம் வருவதற்கு தாமதமாகிவிட்டதால் அவர்களால் கருடரை தூக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவர்கள் கருடரை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார்களாம்... பிறகு கருடருக்கு தனி சன்னதி ஏற்படுத்தி அன்றிலிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டதாம்.






சாதாரண மரத்தில் இருந்த இந்த கருடர் திரு உருவம்.சென்ற நூற்றாண்டில் சிதிலமடைய ஆரம்பித்த பொழுது, இந்த பகுதியை சேர்ந்த பி.வி.கருடாச்சாரிய ஐயங்கார் (BVK IYENGAR) என்பவரின் கனவில் பெருமாள் தோன்றி வேறு திரு உருவம் அமைக்க சொல்ல அவரும் பழைய திரு உருவை அகற்றிவிட்டு 1930 களில் சந்தன மரத்தை கொண்டு திரு உருவம் பிரதிஷ்டை செய்துள்ளார்.


இந்த கருடரின் உற்சவ மூர்த்திக்கு இரு தேவியர்கள் உண்டு. கருடருக்கு சிறப்பு பூஜையாக இரு தேவியருடன்  திருக்கல்யாண உற்சவம் செய்விக்கிறார்கள். வேறு எந்த கோவிலிலும் கருடருக்கு கல்யாண உற்சவம் நடப்பதாக தெரியவில்லை.கருடரின் திருமண உற்சவமே இக் கோவிலில் சிறப்பு. திருமணம் நல்ல படியாக அமையவும்,குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இக்கோவிலில் கருடருக்கு விஷேச அர்ச்சனையோ அல்லது முடிந்தவர்கள் கல்யாண உற்சவமோ செய்து வைக்க அவர்களுடைய பிரார்தனையை நல்ல படியாக முடித்து கொடுக்கிறார் கருட பகவான்.






                                 
                                     உற்சவ கருடர் இரு தேவியர்களுடன்.
                                       (இவருக்குதான் கல்யாண உற்சவம்
                                                  செய்விக்கப்படுகிறது.)              



இந்த கருடரைப்பற்றி சொல்லப்படும் இன்னுமொரு சிறப்பான விஷயம்...   தேவலோகத்திலிருந்து (மேலக்கோட்டை பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வரும்) வைரமுடியை கருடன் பூலோகத்திற்கு கொண்டு வந்த பொழுது இந்த இடத்தில்தான் அதனை கிருஷ்ணருக்கு அளித்தாராம்.




அடுத்தது நலம் தரும் நாகமங்கலா........


நட்புடன்
ரமாரவி..

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

அலுப்பு........


அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது.

கனிமொழியின் அழகான கவிதை.








இந்த வரிசையில் எழுத்தும் சேர்ந்து விட்டது எனக்கு 4,5 மாதங்களுக்கு முன்.









நிறைய எழுத வேண்டும் என்று ஆசையாக பதிவு எழுத ஆரம்பித்தேன்.  ஏன் இந்த திடீர் அலுப்பு என்று யோசித்தேன். முதலில் காரணம் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது எனக்கு எழுதுவது அலுக்கவில்லை.......கணணி, இணைய இணைப்புகளின் பிரச்சனையால் அவற்றை சரி செய்ய அலைந்தும், ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காததால் கணணியிடம் ஏற்பட்ட அலுப்பில் எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று.



இப்பொழுது இந்த ஓய்வு, எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. மீண்டும் எழுத வேண்டும் என்கிற வேகம் வந்து விட்டது. ஒரிரு தினங்களில் புதிய பதிவுகளுடன் சந்திக்கிறேன்.





அன்புடன்
ரமாரவி.